இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. நேற்று ப்ரிஸ்டனில் நடைபெற்ற கடைசி மற்றும் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றி சுலபமானது.
பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற நேற்றைய போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை, இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி சேஷிங் செய்தது. இந்த சேஷிங்கின்போது, சச்சின் தெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில், இன்றைய போட்டியில் இந்திய அணி 19ஆவது ஓவருக்கு முன்பாகவே வெற்றியைப் பதிவுசெய்யும் என நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஒத்துக்கொள்கிறீர்களா என பதிவிட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு 80% பேர் ஆம் என்றும், 20% பேர் இல்லை என்றும் பதிலளித்திருந்தனர்.
அதேபோல், 56 பந்துகளில் நூறு ரன்களைக் கடந்த ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும், 2000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதைப் பாராட்டும் விதமாக பதிவிட்டுள்ள சச்சின், ‘அற்புதமாக விளையாடி இருக்கிறார் ரோகித் சர்மா. மிகவும் மகிழ்ச்சியைத் தந்த இன்னிங்ஸ் அது. ஒருநாள் போட்டிகளிலும் இது தொடரவேண்டும். (19ஆவது ஓவருக்கு முன் போட்டி நிறைவடைந்துவிடும் என்ற எனது கணிப்பை மெய்யாக்கியதற்கும் நன்றி!) எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.