போர்ச்சுக்கல் நாட்டில் மேடிரா தீவில் உள்ள பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ வீட்டில் நேற்று திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்குச் சொந்தமாக ஏழு மாடிகளைக் கொண்ட சொகுசு வீடு ஒன்று மேடிரா தீவில் உள்ளது. ரொனால்டோ, விடுமுறைக் காலங்களில் குடும்பத்தினருடன் வந்து இங்கு தங்குவது வழக்கம். பிற நாட்களில் இந்த வீட்டை வேலையாட்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீட்டில் நேற்று திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ரொனால்டோ கையெழுத்திட்ட ஜுவென்டஸ் அணி ஜெர்சி திருடு போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருடு போன பிற பொருட்கள் குறித்தான முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது அங்குப் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.