Roger Federer

Advertisment

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடாலும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், போட்டியின் முடிவில் மூன்று செட்டுகளை 6-0, 6-2, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். ரஃபெல் நடால் வென்றுள்ள மொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனை ரஃபெல் நடாலால் சமன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஜர் ஃபெடரர், நடாலுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், "நடால் மீது தனிநபராகவும், சாம்பியனாகவும் மிகுந்த மரியாதை எனக்கு உண்டு. நீண்ட காலமாக எனது போட்டியாளர். எங்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டிதான் சிறந்த வீரராக எங்கள் இருவரையும் மாற்றியிருக்கிறது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதற்காக அவரைப் பாராட்டுவது எனக்கு மிகப்பெரிய மரியாதை. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது தொடரும் எங்கள் பயணத்தின் கூடுதலான ஒரு அடி என்று நம்புகிறேன். வாழ்த்துகள் நடால். நீங்கள் இதற்கு தகுதியானவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment