Skip to main content

இந்திய ஜூனியர் அணியா? ஐ.பி.எல்.அணியா? டிராவிடின் பதில் என்ன...?

Published on 13/12/2018 | Edited on 13/12/2018

2018-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர் என அனைத்து தொடர்களிலும் வென்று சாதனை படைத்து இருகிறது இந்திய ஜூனியர் அணி (இந்திய ஏ அணி). மறுபுறம், இந்திய அண்டர்–19 அணி 2018-ல் உலகக்கோப்பை, 2016 மற்றும் 2018-ல் ஆசியக்கோப்பை என கோப்பைகளை வென்றுவருகிறது. இப்படி இளம் இந்திய அணி சாதனை மேல் சாதனை படைத்து, சாதிக்க வழிகாட்டிவருவது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்.  

 

dd

 

 

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர் - 19 பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து, இந்திய ஜூனியர் அணி பல முன்னேற்றம் கண்டுவருகிறது. அணியின் இந்த முன்னேற்றம் டிராவிடின் வழிகாட்டுதலால் சாத்தியமானதாக பலமுறை இளம் வீரர்கள் கூறியுள்ளனர். இந்த வாரம் நடந்து முடிந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் அபாரமாக விளையாடியது இந்தியா ஏ அணி. தொடரை 3-0 என வென்று, நியூசிலாந்து ஏ அணியை ஒயிட்-வாஷ் செய்தது இந்திய ஏ அணி.  

 

 

டிராவிட் ஒரு பேட்ஸ்மேனாக இந்தியாவிற்கு அளித்த பங்களிப்புகள் கணக்கிட முடியாதவை. இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இல்லாதபோது, விக்கெட் கீப்பர் பணியை செய்தார். அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாதபோது, அந்த தேவையையும் பூர்த்தி செய்தார். சிறிதும் சுயநலம் இல்லாமல், அணியின் நலனுக்காக தன்னுடைய இடங்களை விட்டுக்கொடுத்தார். அதே போன்ற சேவையை இன்று இந்திய எதிர்கால கிரிக்கெட் வீரர்களை உருவாக்க தன்னை அர்ப்பணித்துவருகிறார் இந்திய கிரிக்கெட்டின் சுவர் என போற்றப்படும் டிராவிட். 

 

 

dd

 

 

டிராவிட் தன்னை ஒரு வழிகாட்டியாகவே காண்கிறார். மற்ற கோச்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். எல்லா தொடர்களிலும் அணி வெற்றி பெறுவதை தன் இலக்காக அவர் கொண்டதில்லை. ஒவ்வொரு முறையும் இளம் வீரர்கள் தன் முழுத்திறனையும், சிறந்த ஆட்டத்தையும் வெளிகாட்டுவதையே தன் லட்சியமாக கொண்டு செயல்பட்டுவருகிறார்.

 

2018-ல் அண்டர்-19 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது அனைவரும் இந்திய அணியை பாராட்டிவந்தனர். ஆனால், டிராவிட் தன் குறிக்கோளில் இருந்து மாறவில்லை. வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த டிராவிட், “கடின உழைப்பால் இளம் வீரர்கள் வென்றுள்ளனர். கோப்பையை வென்றாலும், இறுதிப்போட்டியில் நம்பர் 1 என்ற அளவுக்கு அணி விளையாடவில்லை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வெற்றி பெற்ற இந்த அணியிலிருந்து எத்தனை வீரர்கள், இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடுகிறார்களோ அதுதான் நமது நோக்கம்” என்று இளம் வீரர்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தினார். பிரித்திவி ஷா இந்த அணியிலிருந்து இந்திய சீனியர் அணிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

dd

 

 

“தன்னுடைய ஆட்டத்தின் மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் டிராவிடின் பங்களிப்பு மிகவும் உதவியது. ஆட்டத்தில் மட்டுமல்ல, அவர் என்னை மனதார வலுவாக ஆக்கியுள்ளார்" என்று ஹர்திக் பாண்டியா ஒருமுறை கூறியிருந்தார். மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், சாஹல், ஜெயந்த் யாதவ் என இந்திய சீனியர் அணியில் இடம்பெற்ற  பல வீரர்கள், டிராவிடிடம் கோச்சிங் பெற்று வந்தவர்கள்.


 
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிக்கு விளையாடி வருகிறார் மனிஷ் பாண்டே. இவர் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் பேட்டிங் சராசரி 358. அவருடைய ஸ்கோர்கள் 5, 111*, 42, 73*, 117*, 21*, 95*,32*,93*,86*,41*. இவர் 2019-ஆம் ஆண்டு இந்திய சீனியர் அணி பங்குபெறும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட தன்னை தயார்படுத்தி வருகிறார். அதேபோல, சுப்மான் கில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.

 

இந்திய ஜூனியர் அணியா? அல்லது ஐ.பி.எல்.அணியா? என்ற பிரச்சனையின்போது இந்திய ஜூனியர் அணிதான் முக்கியம் என்று ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் இருந்து வெளிவந்தவர் டிராவிட். பணங்களில் புரளும் ஐ.பி.எல். போட்டிகளை புறம்தள்ளிவிட்டு, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதே தன் லட்சியமாக கருதி வரும் அவரது பணி மிகவும் போற்றத்தக்கது. 

 


 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.