![Pujara Submankil's massive century; Indian team that accumulated runs](http://image.nakkheeran.in/cdn/farfuture/a1k2C00lUNKxKutp-DboI6sd-MPXZO2ktV1V1d4_99Q/1671187420/sites/default/files/inline-images/181_14.jpg)
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் சட்டோகிராமில் துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 404 ரன்களை இந்திய அணி குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களையும் ஸ்ரேயாஸ் 86 ரன்களையும் எடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி தொடர்ச்சியாக விக்கெட்களை கொடுத்து தடுமாற நேற்றைய நாள் முடிவில் வங்கதேச அணி 133 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் சிராஜ் 3 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்று துவங்கிய மூன்றாம் நாளில் வங்கதேச அணி மீதமுள்ள இரு விக்கெட்களையும் இழந்து மொத்தமாகவே 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 56 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் பின் களம் கண்ட இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 23 ரன்களில் வெளியேற சுப்மன்கில் மற்றும் புஜாரா இணைந்து சிறப்பாக ஆடி இருவரும் சதம் அடித்தனர். சுப்மன்கில் 110 ரன்களில் வெளியேற புஜாரா 102 ரன்களுடனும் கோலி 19 ரன்களுடனும் இருந்த நிலையில் இந்திய அணி 258 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. கிட்டத்தட்ட 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு புஜாரா சதமடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள வங்கதேச அணி விக்கெட்கள் இழப்பின்றி தற்போது வரை 42 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 471 ரன்கள் தேவை எனும் நிலை உள்ளது.