Skip to main content

வீரர்களின் மரண பயம் - ஐந்தாவது டெஸ்ட் இரத்தானதற்கு காரணம் கூறிய கங்குலி!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

dada

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரத்தான போட்டியைத் திரும்ப நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முயற்சி மேற்கொண்டுவருகின்றன.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் தாங்கள் பங்கேற்பது பாதிக்கப்படக்கூடாது என கருதியே ஐந்தாவது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உட்பட சிலர் குற்றஞ்சாட்டினார்.

 

இந்தநிலையில், தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட ஐபிஎல் காரணமல்ல என தெரிவித்துள்ளார்.

 

ஐந்தாவது டெஸ்ட் இரத்து செய்யப்பட ஐபிஎல் காரணமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கங்குலி கூறியதாவது; "இல்லை.. இல்லை. பிசிசிஐ ஒருபோதும் பொறுப்பற்ற வாரியமாக செயல்படாது. மற்ற வாரியங்களையும் நாங்கள் மதிக்கிறோம். வீரர்கள் விளையாட மறுத்தனர். ஆனால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. பிசியோ யோகேஷ் பர்மார் வீரர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். நிதின் படேல் (கரோனாவால் பாதிக்கப்பட்ட பிசியோ) தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு யோகேஷ் பர்மார் மட்டும்தான் வீரர்களுடன் பணியாற்றி வந்தார்.

 

யோகேஷ் பர்மார் வீரர்களுடன் நெருக்கமாக இருந்ததோடு, அவர்களுக்கு கரோனா பரிசோதனைகளைக் கூட மேற்கொண்டார். அவர் வீரர்களுக்கு மசாஜும் செய்துவந்தார். அவர் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தார். அவருக்கு கரோனா உறுதியானதை அறிந்ததும் வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என நினைத்து அவர்கள் பயந்தனர். மரண பயத்தை அடைந்துவிட்டனர். கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது எளிதானதல்ல. நீங்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.”

இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கங்குலியின் பயோ-பிக்கை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Aishwarya Rajinikanth to direct Ganguly's bio-pic

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியின் பயோ-பிக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.  

 

பின்பு ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரன்பீர் கபூர், "கங்குலி ஒரு லெஜண்ட். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகவும் டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் கதாபாத்திரத்திற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து  'ஓ சாத்தி சல்' என்ற தலைப்பில் இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன் பிறகு அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

"அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" - பிரபல கிரிக்கெட் வீரர் பயோ பிக் குறித்து ரன்பீர் கபூர்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Ranbir Kapoor about Sourav Gangulys biopic

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே வெளியானது. பின்பு இப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாகவும் கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது. 

 

சமீபத்தில் கங்குலி பயோ பிக்கில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரன்பீர் கபூர். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "கங்குலி ஒரு லெஜண்ட். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ரன்பீர் கபூர் சமீபத்தில் கொல்கத்தா சென்று கங்குலியை சந்தித்து கிரிக்கெட் விளையாடினார். இது குறித்து ரன்பீர் கபூர் கூறுகையில், "அவருடன் கிரிக்கெட் விளையாடினது ஒரு கனவு நனவான தருணம். அவர் எனக்கு 10 பந்துகளை வீசினார். அவருடன் விளையாடுவது ஒவ்வொரு குழந்தையின் கனவாகும். இந்த தருணத்தை மிகவும் ரசித்தேன்” என்றார்.