Skip to main content

இந்திய அணியால் தற்கொலை வரை சென்றேன்- பாகிஸ்தான் பயிற்சியாளர் கண்ணீர்...

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றவுடன் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றியதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

 

pakistan cricket coach pressmeet

 

 

உலகக்கோப்பை தொடரில் கடந்த 16-ம் தேதி ஓல்ட்டிரா போர்டு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை வென்று இந்திய அணி பெருமையை தக்கவைத்துக் கொண்டது.

இந்த சூழலில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அந்த அளவுக்கு அழுத்தங்கள் வந்தன. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றே தோன்றியது. ஊடகத்தினரின் பேச்சுகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் நாங்கள் விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்றோம். வேறு வழியின்றி நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலைக்குச் சென்று, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினோம்" என்று கூறினார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.