Skip to main content

மோசமாக பந்து வீச ஒன்றரை கோடி தருவதாகக் கூறிய பாகிஸ்தான் கேப்டன் - ஷேன் வார்னே அதிர்ச்சி தகவல்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

shane warne

 

சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னேவின் வாழக்கையைத் தழுவி ஷேன் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த ஆவணப்படத்தில் மோசமாக பந்து வீச தனக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் 276,000 டாலர்கள் தருவதாக கூறி பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

 

1994 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவையாக இருந்தது. அந்த சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஷேன் வார்னே கூறியுள்ளார். இதுதொடர்பாக வார்னே கூறியுள்ளதாவது; பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் என்னை பார்க்க வேண்டும் என்றார். எனவே நான் அவரின் அறைக்கு சென்று கதவை தட்டினேன். சலீம் மாலிக் கதவை திறந்தார். நான் அறைக்குள்ளே  அமர்ந்ததும், சலீம் மாலிக், போட்டி நன்றாக செல்கிறது என்றார். நான், ஆமாம் நாளை நாங்கள் வெல்வோம் என நினைக்கிறேன் என்றேன்.

 

உடனே அவர் நாங்கள் தோற்க முடியாது. பாகிஸ்தானில் நாங்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்குப் புரியாது. எங்கள் வீடுகள் எரிக்கப்படும். எங்கள் குடும்பத்தினரின் வீடுகள் எரிக்கப்படும் என்றார். ஸ்டெம்ப்புகளுக்கு வெளியே வைடாக பந்து வீச எனக்கும் எனது அணி வீரர் டிம் மேவுக்கும் 276,000 டாலர் (இந்திய மதிப்பில் 1.5 கோடி) தருவதாக கூறினார். எனக்கு உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் திகைத்துப்போய் அப்படியே உட்கார்ந்திருந்தேன். பின்னர் நாங்கள் உங்களைத் தோற்கடிக்கப்போகிறோம் எனத் தெரிவித்தேன் . இந்த சம்பவம் குறித்து மார்க் டெய்லர், பயிற்சியாளர் பாப் சிம்ப்சன், போட்டி நடுவர் ஜான் ரீட் ஆகியோரிடமும் தெரிவித்தோம் எனக் கூறியுள்ளார்.

 

2000 ஆண்டில் சலீம் மாலிக்கிற்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஆட்டத்தின் திக் திக் நிமிடங்கள்; டென்ஷன் ஆன ரசிகர்கள்! 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

south africa beat pakistan in world cup cricket

 

சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் 26வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் நேற்று (27ம் தேதி) மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

 

இதில், அதிகபட்சமாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் எடுத்து 50 ரன்கள் குவித்து அவுட்டானார். அதை தொடர்ந்து, செளத் ஷகீல் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 52 ரன்களோடு அவுட்டானார். மேலும், தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர். 

 

இதனை தொடர்ந்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தெம்பா பவுமா 28 ரன்களையும், டி காக் 24 ரன்களையும் எடுத்து அவுட்டானார்கள். அடுத்தடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் மிகவும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில்,  நிதானமாக விளையாடிய மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு  271 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில், பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம், உசாமா மிர் மற்றும் ஹரிஸ் ரஃப் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இந்த உலக கோப்பை லீக் போட்டியில் 6 முறை விளையாடிய பாகிஸ்தான் அணி 2 வெற்றியையும், 4 தோல்விகளையும் சந்தித்தது. கடந்த 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியோடி மோதிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் முன்னால் நட்சத்திர வீரர் வாசிம் அக்ரம் தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருந்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஸ்குவாடுக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆனால் தற்போது அது பல் இல்லாத பாம்பு போல் உள்ளது. 

 

இரு விக்கெட்களை மட்டுமே இழந்து 280 ரன்களை எடுப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால், இதனை ஆஃப்கானிஸ்தான் அசால்டாக செய்திருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட்டை காரணம் சொல்ல முடியாது. வீரர்களின் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். மூன்று வாரமாக நீங்கள் விளையாடவில்லை. நான் தனிப்பட்ட முறையில் வீரர்களின் பெயர்களைச் சொன்னால் அவர்களுக்கு முகம் வாடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தற்போது இவர்களுக்கு எந்த சோதனையும் வேண்டாம். நீங்க உங்க நாட்டுக்காக விளையாடுறீங்க. தொழில் ரீதியாக நீங்கள் விளையாட பணம் பெறுகிறீர்கள்” என்று தெரிவித்திருந்தார். 

 

அவர் பேசிய கருத்து கிரிக்கெர் ரசிகர்கள் மிகவும் பேசுபொருளாக மாறியிருந்தது. மேலும், பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் கவலை அளித்திருந்தது. இந்த சூழலில், இந்த லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் பாகிஸ்தான் அணி இறுதி வரை போராடியது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த உலக கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியை காண ரசிகர்கள் பலரும் வந்து ஆரவாரம் செய்தனர். இதில் விளையாடிய, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் என இரு அணிகளுக்கும் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை தந்தனர். இந்த சூழலில், எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் பதட்டமாக இருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி வெற்றுள்ளது. 


 

Next Story

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்; ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

A policeman was involved in an argument with a fan for 'Pakistan Zindabad' slogan;

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில் நேற்று (20-10-23) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரிடம் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் 18வது லீக் ஆட்டமான நேற்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தன. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது. 

 

அப்போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கங்களை எழுப்பி வந்தார். இதனை பார்த்த அங்கிருந்த போலீஸார் ஒருவர் அவரிடம் வந்து, ‘மைதானத்தில் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தான் எழுப்ப வேண்டும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது’ என்றும் கூறினார். இதில், அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர், “பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் போது நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பாமல் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களையா எழுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த காவலர், ‘இந்தியாவுக்கு ஆதரவான எந்த முழக்கங்களை வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பக் கூடாது என்று கூறினார். இதில், இருவருக்கும் மைதானத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போட்டி அமைப்பாளர்கள் அங்கு வந்து அந்த ரசிகரை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.