Skip to main content

வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்; ஆட்ட நேர சுவாரசியங்கள்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Pakistan - Bangladesh asia cup match details

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சுப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று (06-09-2023) பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன.

 

ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று லாகூர், கடாபி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சகிப் ஹல்ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் முகமது-மெஹிதி ஹசன் கூட்டணி களமிறங்கியது. ஆட்டத்தின் 1.1 ஓவரில் ஹசன் எதிர்கொண்ட முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய லட்டன் தாஸ் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து முகமது நயீம் 20 ரன்கள் எடுத்து 7.3 ஓவரில் வெளியேற, அவரைப் பின் தொடர்ந்து 9.1 ஓவரில் ஹ்ரிடாய் 2 ரன்களில் போல்ட் ஆனார். ஐம்பது ரன்களை கடப்பதற்குள் வங்கதேசம் 4 வீரர்களை இழந்து நிலை தடுமாறியது. அடுத்து ஆட்டத்தை நிலைநிறுத்தி முஷ்பிகுர் ரகுமானும் கேப்டன் சகிப் ஹல்ஹசனும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேசம் மெதுவாக ரன்களை குவிக்கத் தொடங்கியது. பின்னர், சகிப் 57 பந்தில் 53 ரன்கள், முஷ்பிகுர் 64 ரன்கள் என இருவரும் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தனர். 174 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேசம் மீண்டு எழும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வீரர்கள் வரிசையாக வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். பின்னர், 19 ரன்கள் சேர்ப்பதற்குள் வங்கதேசம் 5 விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இதனால், 38.4 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே வங்கதேசத்தால் குவிக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில், ஹாரிஸ் ரவுப் 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா 3 விக்கெட், அஹமத், அஷ்ரப், அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என இரண்டாம் பாதியில் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

 

தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான் - இமாம் உல் ஹக் கூட்டணி இறங்கியது. ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடத் தொடங்கியது பாகிஸ்தான் அணி. பின்னர், 20 ரன்களில் ஜமான் வெளியேற பாகிஸ்தான் 35 ரன்களுக்கு 1 விக்கெட் என இருந்தது. அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் களத்தில் இறங்கி 17 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார். இருந்தும், இமாம் - ரிஸ்வான் கூட்டணி சிறப்பாக விளையாடத் தொடங்கினர். இருவரின் ஆட்டத்தால் வங்கதேச பௌலர்கள் திணறினர். அதிரடியாக விளையாடி வந்த இமாம் உல் ஹக் 84 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து போல்ட் ஆனார். அதில், 4 சிக்சர், 5 பவுண்டரி என பறக்கவிட்டார். ரிஸ்வான் இறுதி வரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆட்டம் முடிவில் அவர் 63 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அணி தனது இலக்கான 293 ரன்களை 39.3வது ஓவரிலேயே கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின், ஷோரிபுள், மெஹிதி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

 

ஆட்ட நாயகன் விருது இமாம்-உல்-ஹக்கிற்கு கிடைக்குமா? அல்லது 4 விக்கேட் எடுத்த ரவுப் பெறுவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஹாரிஸ் ரவுப் ஆட்ட நாயகன் பட்டத்தைப் பெற்றார். ஆசிய கோப்பை 2023ன் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை (09-09-2023) வங்கதேசம் - இலங்கை அணிகள் விளையாட உள்ளன. இது இந்திய நேரப்படி 3.00 மணிக்கு தொடங்கும். முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் தோற்றுள்ள வங்கதேச அணி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.