ADVERTISEMENT

நிராகரிப்பின் வலி;பஞ்சாப்பை நிமிரச் செய்த சஷாங்க் சிங்!

09:46 AM Apr 27, 2024 | arunv

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

ADVERTISEMENT

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நவம்பர் மாத மழை என்பது எப்படி உறுதியோ அதுபோல நரைனின் அதிரடி உறுதி என சிறப்பாக ஆரம்பித்தார் சுனில் நரைன். அவருடன் இணைந்து சால்ட்டும் சகட்டுமேனிக்கு சிக்சர்களை பறக்கவிட கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

ADVERTISEMENT

சால்ட், பேர்ஸ்டோ என இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. அர்ஸ்தீப் 2, சாம் 1, ஹர்ஷல் 1, ராஹுல் 1 முறையே விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டியது பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் பேர்ஸ்டோ ஸ்ட்ரைக் செய்ய தடுமாற பிரப்சிம்ரன் சிங் சிக்சர்களை பறக்க விட்டார். பவுண்டரிகளும் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பேர்ஸ்டோ தன் பங்குக்கு அதிரடி காட்டி அரை சதம் கடந்தார். பின்னர் பேர்ஸ்டோவுடன் இணைந்த ரூசோ சிறிது அதிரடி காட்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் சாம் கரன் இறங்காமல், இந்த சூழலை சமாளிக்க சஷாங்தான் சிறந்தவர் என முடிவெடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு அவரைக் களமிறக்கினார். சஷாங்க் அவரை ஏமாற்றவில்லை. இந்த ஐபிஎல்-இல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஷாங்க் சிங், ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி சிதறடித்தார். விக்கெட் விழ சிறு வாய்ப்பு கூட தராமல் அதிரடியாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும்.

அனுபவ வீரருக்கான அழகுடன் ஆடிய பேர்ஸ்டோ ஐபிஎல்-இல் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரு அணியால் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் ரேசில் நாங்களும் உள்ளோம் என்று மற்ற அணிகளுக்கு தெரிவித்துள்ளது. சதமடித்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT