Skip to main content

நேர்த்தியாக ஆடிய நெதர்லாந்து; சிதறடிக்கப்பட்ட சவுத் ஆப்பிரிக்கா

Published on 17/10/2023 | Edited on 18/10/2023

 

 Nicely played Netherlands; Dispersed South Africa

 

உலகக் கோப்பையின் 15வது லீக் ஆட்டம் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. மழையின் காரணமாக ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

 

பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், டாஸை வென்ற சவுத் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் களம் இறங்கினர். விக்ரம்ஜித் சிங் இரண்டு ரன்களிலும் மேக்ஸ் 18 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து அந்த அணியின் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ஆக்கர் மேன், லீடே, சைப்ரண்ட் ஆகியோர் முறையே 13, 2, மற்றும் 19 ரன்களில் அவுட் ஆக நெதர்லாந்து 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

நெதர்லாந்து அணியில், கேப்டன் எட்வர்ட்ஸ் மட்டும் அரைசதம் கடந்து 72 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். அவருடன் இணைந்து டெயிலெண்டர்களான தேஜா எடுத்த 20 ரன்களும், வான்டர் மெர்வே அதிரடியாய் சேர்த்த 29 ரன்களும் சேர்த்து, நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது. சவுத் ஆப்பிரிக்கா தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய இங்கிடி, ஜான்சன், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்ட், மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 

பின்னர் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் 16 மற்றும் பவுமா 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அடுத்து வந்த டுஸைன் 4 ரன்களிலும் மார்க்ரம் 1 ரன்னிலும் வெளியேறினர். சவுத் ஆப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த கிளாசன் மற்றும் மில்லர் ஓரளவு நிலைத்து ஆட ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த கிளாசன் 28 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ஜான்சனும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மில்லருடன் ஜெரால்ட் இணைந்தார். ஜெரால்டும் 22 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டெயிலெண்டர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் சவுத் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நெதர்லாந்து அணியில் பீக் 3 விக்கெட்டுகளும், வான்டர் மெர்வே, மீகெரென், லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஆக்கர்மென் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

இதன் மூலம் வலிமை வாய்ந்த சவுத் ஆப்பிரிக்கா அணியை, அனுபவம் குறைந்த நெதர்லாந்து அணி வீழ்த்தி, வெற்றி வாகை சூடி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி, சவுத் ஆப்பிரிக்கா அணியை முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதிக்கொண்ட நிலையில், 6 முறை சவுத் ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது.

 

நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுத் ஆப்பிரிக்கா அணி தோல்வியைத் தழுவ, நெதர்லாந்து அணியின் வான்டர் மெர்வேவும் ஒரு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். நெதர்லாந்து அணிக்கு விளையாடும் இவர், முன்பு சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவம் இவருக்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கை கொடுக்க, ஐபிஎல் அனுபவமும் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

 


 வெ. அருண்குமார் 

 


 

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.