Skip to main content

இந்தியாவுக்கு கிடைத்த புதிய பினிஷர் ஸ்பெஷலிஸ்ட்!....

Published on 26/11/2018 | Edited on 27/11/2018

தோனி இனிமேல் அதே அளவிலான சிறந்த பினிஷர் கிடையாது என்று அசாருதீன் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறி வருகின்றனர். அதே சமயம், இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான ஷர்மா, தவான், கோலி ஆகியோர் பெரும்பாலான போட்டிகளை வெற்றிகரமாக முடித்து வருகின்றனர். மேலும், கோலி பேட்டிங் கிங்காக மாறியுள்ளார். இருந்தபோதும், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கின் சமீபத்திய ஆட்டங்கள் புதிய புத்துணர்ச்சியை இந்திய அணிக்கு அளித்துள்ளது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பினிஷர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறி வருகிறார்.   

 

kk

 

“தினேஷ் கார்த்திக் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருக்கப் போகிறார். குறைந்த அளவு வாய்ப்புகளே அவருக்கு வழங்கப்பட்டது. அதை அவர் சரியாக பயன்படுத்தினார். கார்த்திக் எதிர்காலத்தில் கேப்டனாக இருக்கும் அளவுக்கு நல்ல தலைமை பண்புகளை கொண்டுள்ளார்.” என்று 2007-ஆம் ஆண்டு  முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் கிரெக் சேப்பல் தினேஷ் கார்த்திக் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

 


கிரெக் சேப்பல் அப்போது தெரிவித்திருந்த கருத்து இன்று உண்மையாக மாறி வருகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். தோனிக்கு முன்பிருந்தே இந்திய அணியில் இருப்பவர். இன்றுள்ள இந்திய அணியின் சீனியர் இவர்தான். உண்மையில் இவருடைய திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். 

 

மஹேந்திர சிங் தோனி வருவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலி கேப்டனாக இருந்தபோது பல விக்கெட் கீப்பர்களை முயற்சி செய்தார். அதில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். அவருடைய பேட்டிங் ஓரளவு இருந்தபோதும், விக்கெட் கீப்பிங் சொல்லும்படி இல்லை. இதனால் தோனி வந்த பிறகு, தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. 

 

ஆரம்ப காலகட்டங்களில் சொதப்பினாலும், தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல பார்மில் உள்ளார். 2017 மற்றும் 2018-ல் 18 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு ஆடியுள்ளார். அதில் அவர் அடித்த ரன்கள் 252. பேட்டிங் சராசரி 60+, ஸ்ட்ரைக் ரேட் 152+. தான் விளையாடிய 14 இன்னிங்ஸ்களில் 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.  

 

டி20-யில் இந்தியா சேசிங் செய்த போது, தினேஷ் கார்த்திக் நாட் அவுட்டாக இருந்த 9 முறையும் இந்திய அணி வென்றுள்ளது. அதில் அவரின் பேட்டிங் சராசரி 74, ஸ்ட்ரைக் ரேட் 141. அவர் அவுட் ஆன 3   போட்டியிலும் தோற்றுள்ளது. 
 

 

kk

 

 

கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். 13 இன்னிங்க்ஸ்களில் 350 ரன்கள் குவித்துள்ளார். 6 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். பேட்டிங் சராசரி 51. 

 

ஐ.பி.எல். போட்டிகளை பொறுத்தவரை இந்த இரண்டு வருடங்களில் 30 போட்டிகளில் 861 ரன்கள் எடுத்துள்ளார். 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். பேட்டிங் சராசரி 45, ஸ்ட்ரைக் ரேட் 143. இந்த வருட ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டார். ப்ளே-ஆப் சுற்று வரை அணியை அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளது. ராயுடு அணியில் இடத்தை உறுதி செய்துள்ளார். மீதம் இருக்கும் ஒரு இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்ப வாய்ப்புகள் அதிகம். டி20–ஐ பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ளார். 33 வயதாகும் தினேஷ் கார்த்திக் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு நாள் மற்றும் டி20  போட்டிகளில் இந்தியாவின் பினிஷர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.