New captain appointed for Mumbai Indians

ஐபிஎல் - 2024 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கி இருந்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா.

Advertisment

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. அதில், “ரோகித் ஷர்மாவின் ஒப்பற்ற தலைமைக்கு நன்றி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் கேப்டனாக அவரது பங்களிப்பு சாதாரணமானது அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை குவித்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக இடம்பிடித்துள்ளார். அணியை மேலும் வலுப்படுத்த களத்திலும், வெளியிலும் அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.