Skip to main content

நேபாள அணியை வீழ்த்தியது இந்திய அணி!

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

nepal vs india asia cup match

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நேற்று (04-09-2023) இந்தியா-நேபாளம் அணிகள் மோதின. இதில் டக்வர்த் லெவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை துவம்சம் செய்தது. 

 

ஆசியக் கோப்பை 2023ன் நான்காவது லீக் ஆட்டம் நேற்று பல்லக்கலே ஸ்டேடியத்தில் இந்தியா-நேபாள் இடையே நடந்தது. இந்திய அணி பாகிஸ்தானிடம் முதல் ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால், நேபாளத்துடன் வென்றே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியது. முதல் போட்டியில் நேபாளும் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளதால் அவர்களும் வென்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும். இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பௌலிங்கை தேர்வு செய்தார். நேபாள் அணியின் குஷால்-ஆசிப் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வேகமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் அதிகரிக்கத் தொடங்கியது. இந்திய வீரர்கள் 4 ஓவர்களில் 3 கேட்ச்களை நழுவ விட்டனர். பின்னர், குஷால், 25 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நேபாள் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து வந்த வீரர்கள் பீம் சர்கி 7 ரன்கள், கேப்டன் ரோகித் பாடேல் 5 ரன்கள், குஷால் மல்லா 2 எனத் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து நேபாள் தடுமாறியது. இவர்கள் மூவரையும் தனது சூழல் பந்தில் சிக்க வைத்தவர் ரவீந்திர ஜடேஜா தான். 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நேபாள் அணி 101 ரன்கள் எடுத்திருந்தது.

 

அணி வீரர்கள் வரிசையாக சரிந்தாலும், தொடக்க வீரர் ஆசிப் ஷேக் நிதானமாக 97 பந்தில் 58 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து, குல்ஷன் ஷா-திபேந்திரா இருவரும் சற்று ஆட்டத்தை நிதானப்படுத்தினர். பின்னர், குல்ஷன் ஷா 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சோம்பால், அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாச நேபாள் 200 ரன்களை எட்டியது. சோம்பால் கடைசியாக வந்தாலும் 48 ரன்களை அணிக்கு சேர்த்துவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, நேபாள் அணி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசினர். இந்தியா 230 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களம் இறங்கியது. 

 

இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா-சுப்மன் கில் களமிறங்கினர். 2.1 ஓவர்களுக்கு 17 ரன்கள் இந்திய அணி சேர்க்க, மழை தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் பெய்த மழை 10 மணிக்கு நின்றது. பின்னர் ஆட்டம் 10.15க்கு டிஎல்எஸ் (டக்வர்த் லெவிஸ் மெதட்) விதிமுறையில் தொடங்க, இந்தியாவிற்கு 23 ஓவரில் 145 ரன்கள் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. வெற்றி பெற்றாக வேண்டும் என மீண்டும் களம் கண்ட ரோகித்-சுப்மன் கூட்டணி அதிரடியாக விளையாடத் தொடங்கியது. ஆட்டத்தில் சிக்ஸரும், பவுண்டரிகளும் நின்றுவிட்ட மழைபோல மீண்டும் பெய்தது. பின்னர் ரோகித் 49 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து கில்லும் 47 பந்துகளில் அரைசதம் விலாச, இந்தியா வெற்றி வாய்ப்பை பாதி உறுதி செய்தது. இதன்மூலம் இந்திய அணி 14 ஓவரில் 100 ரன்களைத் தாண்டி சென்றது. மேலும் இரண்டு வீரர்களும் அதிரடி காட்ட, இந்தியா 20.1 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்து வெற்றி பெற்றது. இறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வென்றது இந்திய அணி. இதனால், சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்தது.

 

ஆட்டம் முடிவில் சுப்மன் கில் 62 பந்தில் 67 ரன்களும், ரோகித் சர்மா 74 ரன்களை 59 பந்துகளில் விளாசி ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இன்றைய லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் கடாபி ஸ்டேடியத்தில் மோதவுள்ளது. ஆப்கான் பெருவாரியான ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தினால் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகளும் குறைவே. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு தொடங்கும்.

 


 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.