Skip to main content

மும்பை இன்னமும் சச்சினின் அணி தான்... 4-வது முறை கோப்பையை வென்று சாதிக்குமா?

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

இனி இரண்டு மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் விவாதப் பொருள் ஐ.பி.எல். டி20 தொடராகத்தான் இருக்கும். இதில் அதிகம் விவாதிக்கப்படும் அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். தமிழ்நாட்டில் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டில் மும்பை அணியின் டி ஷர்ட்களை அணிந்திருக்கும் இளைஞர்களைக் காணலாம். இந்த அளவுக்கு மும்பையை தவிர மற்ற இடங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பிரபலமாகவும், அதிக ஆதரவுடனும் இருக்க காரணம் சச்சின் தான்.

 

sachin

 

முதல் சில சீசன்களில் மட்டுமே விளையாடினார் சச்சின். ஆனால் அதற்கான தாக்கம் இன்னும் இருக்கிறது. மேலும் ரோஹித்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப், பும்ராவின் டெத் பவுலிங், பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் சச்சினின் ரசிகர்கள் இன்னும் மும்பை அணியின் பக்கம் உள்ளனர். 
 

2013, 2015, 2017 என ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் மும்பை அணி கோப்பையை வென்றது. இதனால் இந்த வருடமும் கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் சில மும்பை அணியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 3 முறை ஐ.பி.எல். கோப்பை, 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்று டாப் அணியாக வலம் வருகிறது மும்பை. ஐ.பி.எல்.லில் சென்னை மற்றும் மும்பை அணிகள் முக்கிய அணிகளாக கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் உள்ள அணி மும்பை இந்தியன்ஸ். 
 

ஐ.பி.எல். தொடர்களின் தொடக்கத்தில் ஒரு சில தொடர்களில் சற்று ஏமாற்றம் அளித்து வந்த மும்பை அணி பின்னர் சிறப்பான அணியாக உருவெடுத்து 3 முறை கோப்பையை வென்றுள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை 23 போட்டிகளில் சந்தித்த நிலையில் மும்பை அணி 12 போட்டிகளிலும், சென்னை அணி 11 போட்டிகளிலும் வென்றுள்ளது. சென்னை அணியை அதிக முறை வீழ்த்தியுள்ள ஒரே அணி மும்பை அணி மட்டுமே. 

 

mi vs csk

 

கடந்த ஆண்டு மும்பை அணியின் காம்பிநேசனில் நடந்த ஒரு சில தவறுகளால் சில போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இந்த ஆண்டு அந்த தவறுகளை சரிசெய்து நான்காவது முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறது மும்பை அணி. கேப்டன்ஷிப்பில் அசத்தி வருகிறார் ரோஹித். 
 

கடந்த இரு ஐ.பி.எல்.லிலும் ரோஹித் சர்மா ஒப்பனிங் இறங்காமல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். இந்த 2 தொடர்களில் அவரது சராசரி 23.83 மட்டுமே. இந்த முறை அவர் அனைத்து போட்டிகளிலும் துவக்க வீரராக களமிறங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 

எவின் லீவிஸ், குயிண்டன் டி காக், ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்களுடன் மும்பை அணியின் டாப் ஆர்டர் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு பலமாகவுள்ளது. இவர்களுடன் உள்ளூர் வீரர்களான அன்மோல்பிரீத் சிங், சித்தேஷ் லாடு, ஆதித்யா தாரே ஆகியோர் பேக் அப் வீரர்களாக இருப்பார்கள். 
 

ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, குருணல் பாண்டியா, பென் கட்டிங் ஆகியோர் ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமை கொண்டவர்கள். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். லோயர் ஆர்டர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடிய ஆல்ரவுண்டர்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள்.  
 

ஸ்பின் பவுலிங்கில் மயங்க் மார்க்கண்டே, ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ் ஆகியோர் உள்ளனர். மேலும் குருணல் பாண்டியா ஸ்பின் பவுலிங்கில் பங்களிப்பார். ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை உலகத்தரம் வாய்ந்த டி20 பவுலரான பும்ரா எதிரணியை மிரட்டும் வகையில் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆடம் மில்னே, மிட்செல் மெக்லீனஹன், ஜேசன் பெஹ்ரன்டார்ப், மலிங்கா, ரஷிக் சலாம், பரிந்தர்  சரண் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மிகவும் வலுவாக உள்ளது.  
 

யுவராஜ் சிங்கை மும்பை அணி எந்த ரோலில் பயன்படுத்த உள்ளது என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். மும்பை அணியின் பயிற்சியாளராக ஜெயவர்தனே, பேட்டிங் பயிற்சியாளராக ராபின் சிங், பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பான்ட், பீல்டிங் பயிற்சியாளராக ஜெம்ஸ் பம்மென்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 25 வீரர்களில் 17 இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 
 

ஐ.பி.எல். தொடர் முடிந்தவுடன் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் பேட்டிங்கில் முக்கிய வீரர்களான  எவின் லீவிஸ், குயிண்டன் டி காக் ஆகியோர் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகம் தான். அதேபோல பும்ரா, ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரன்டார்ப் ஆகிய முக்கிய வீரர்கள் தொடரில் முழுவதும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாக கருதப்படுகிறது.  
 

ஸ்பின் பவுலிங்கில் குருணல் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே ஆகியோர் மட்டுமே ஓரளவு நம்பிக்கை தருவார்கள். ஸ்பெஷல் ஸ்பின்னர்கள் இல்லாததும், அனுபவம் இல்லாத ஸ்பின்னர்கள் இருப்பதும் அணிக்கு பலவீனமாக அமையும். சென்ற வருடமும் மும்பை அணிக்கு இதே பலவீனம் இருந்தது. 
 

முஸ்டாபிஸூர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், அகிலா தனஞ்ஜெயா, டுமினி, சவுரப் திவாரி, பிரதீப் சங்வான் ஆகிய வீரர்களை விடுவித்து டி காக், யுவராஜ் சிங், பரிந்தர் சரண், லஷித் மலிங்கா ஆகியோரை இந்த ஆண்டு புதிதாக எடுத்துள்ளனர். 

 

பலம்: 

வலுவான தொடக்க இணை மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்.

உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள்.

சிறந்த ஆல்ரவுண்டர்கள். 

 

பலவீனம்:

ஸ்பின் பவுலிங் யூனிட். 

தொடர் முழுவதும் முக்கிய வீரர்கள் விளையாடுவது சந்தேகம்.

பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக் அப் இந்திய வீரர்கள் இல்லாதது.
 

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
 

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குருணல் பாண்டியா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், யுவராஜ் சிங், லஷித் மலிங்கா, எவின் லீவிஸ், குயிண்டன் டி காக், பொலார்டு, பென் கட்டிங், ஆடம் மில்னே, மிட்செல் மெக்லீனஹன், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஆதித்யா தாரே, மயங்க் மார்க்கண்டே, ஜெயந்த் யாதவ், பரிந்தர் சரண், ராகுல் சஹார், அன்மோல்பிரீத் சிங், சித்தேஷ் லாடு, பங்கஜ் ஜெய்ஷ்வால், அனுகுல் ராய்,  ரஷிக் சலாம்.
 

 

 

 

 

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.