உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 13வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தத் தொடரில் தங்களது முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக முஜீப் உர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே போட்டி முடிந்த பிறகு மைதானத்திற்குள்ளே வந்த ஒரு சிறுவன், முஜீப் உர் ரஹ்மானை கட்டிப்பிடித்து அழுதார். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து முஜீப் உர் ரஹ்மான், அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அல்ல; இந்தியாவை சேர்ந்தவர் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “அந்த சிறுவன் ஆப்கானிஸ்தான் அல்ல; அவன் ஒரு இந்தியன். எங்களின் வெற்றிக்கு அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு உணர்வு. உங்களின் ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணியின் போட்டிக்கு முன்பு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் செல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது; இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.