Skip to main content

தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள் தோனி!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் முடிவிலேயே, தோனியின் ஓய்வு பற்றிய பேச்சுகள் எழுந்துவிட்டன. தன்னிடம் அதுபற்றி கேள்வியை எழுப்பிய செய்தியாளரின் வாயில் இருந்தே, தான் ஃபிட்டாக இருப்பதாக சொல்லவைத்து, ஓய்வு தேதியைத் தள்ளிப் போட்டார் தோனி. கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றது முதலே, தோனியின் ஓய்வு குறித்து பரவலாக செய்திகள் வருவதுண்டு.

 

ms dhoni worldcup semifinal match against newzealand

 

 

விளையாட்டு என்றாலே வெற்றி, தோல்விதான். முடிவென்று வரும்போது, தோல்வி வந்தால் தோனிதான் காரணமென்று விமர்சனங்கள் எழத் தொடங்கின. வயதாகி விட்டதோ என்று கிண்டலாகச் சொல்லும்போது, அப்பாக்கள் அணியான சென்னை சூப்பர் கிங்ஸை ஐபிஎல் கோப்பையைத் தூக்கிச் சுமக்க வைத்தார் தல தோனி. நேர்மறையோ, எதிர்மறையோ… தன் விளையாட்டின் மூலமாகவே பதில் சொல்வார் அவர்.

2019 உலகக்கோப்பை தொடரிலும் தோனிமீதான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் ப்ளேயரைப் போல் ஆடியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அணியாக களமிறங்கியும், சக வீரர்களின் தோல்வியையும் தோனியே தோளில் சுமப்பது இது முதல்முறையல்ல. இந்த நிலையில்தான், டேபிள் டாப்பரான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை எதிர்கொண்டது. வெறும் 240 ரன்களை இலக்காகக் கொடுத்தது நியூசிலாந்து அணி.

சுலபமாகப் பட்டாலும் இந்த இலக்கை சேஸ் செய்யத் தொடங்கிய முதல் பந்தில் இருந்தே, இந்திய அணி சறுக்கலைச் சந்தித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து இந்தியாவின் டாப் ஆர்டரைக் கழற்றி வீசியது நியூசிலாந்தின் வேகப்பந்து படை. நான்காவது விக்கெட்டாக தோனி அல்லது தினேஷ் கார்த்திக்கைக் களமிறக்கும் கேப்டன் விராட்டின் முடிவை மாற்றி, ரிஷாப் பாண்டை இறக்கிய கோச் ரவி சாஸ்திரியின் முடிவும் தோற்றுப்போனது. இதனால், நேரடியாக சென்று தன் ஆக்ரோஷத்தை கோச்சிடம் காட்டினார் விராட்.

 

ms dhoni worldcup semifinal match against newzealand

 

தினேஷ் கார்த்திக், ரிஷாப் பாண்ட், ஹர்திக் பாண்டியா என மீண்டும் இறங்கு முகத்தைச் சந்தித்திருந்த இந்திய அணி, நூறு ரன்களைக் கடப்பதற்குள் படாத பாடு பட்டது. ஆனால், தோனி – ரவீந்திர ஜடேஜா இணை இந்திய வீரர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, மீண்டும் வெற்றிவரை கூட்டிச்சென்றது. இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை தலைகீழாக மாறி, ப்ரெஷர் முழுவதும் நியூசிலாந்து அணியின் பக்கம் திரும்பிய நிலையில்தான் அடுத்தடுத்து வீழ்ந்தது தோனி – ஜடேஜா இணை. வேகம் வெற்றியாக மாறவில்லை. 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.

தோனி நின்றிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்பது ரசிகர்கள் எண்ணம். அதனால்தான், தோனியின் ரன் அவுட் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே இப்போதும் ரசிகர்களை நோகடிக்கிறது. தோல்வி விரக்தியில் திணறி நடக்கும் தோனியின் வீடியோவை, பாகுபலி பேக் க்ரவுண்டுடன் இணைத்து, கவலையை வெளிப்படுத்துகிறார்கள் அவர்கள். தன் பயணத்தை ரன் அவுட்டில் தொடங்கி, ரன் அவுட்டில் முடித்துவிட்டார் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். இன்னொருபுறம், பீல்டிங் செட்-அப்பில் இருந்த குளறுபடியை அம்பயர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற புகார்களும் ஐசிசியின் கதவைத் தட்டுகின்றன.

 

ms dhoni worldcup semifinal match against newzealand

 

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேசும்போது, “240, 250 ரன்கள் அடித்தால் போதும், மைதானத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பினோம். அடித்தோம். ஜெயித்தோம்” என்கிறார். அந்த வேகம் இந்திய அணியிடம் இல்லாமல் போனது. தோனியின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அதைக் கைப்பற்றியதுதான் எங்கள் வெற்றிக்குக் காரணமானது” என்று கூறியிருக்கிறார்.

சச்சின் அவுட் ஆனதும் டிவியை ஆஃப் செய்துவிட்டுச் சென்ற காலத்தை மாற்றிய பெருமைக்குரியவர் தோனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக்கோப்பை பெறக் காரணமாக இருந்த, தோனியின் கடைசி சிக்சரே அதற்கு உதாரணம். அமைதியாக, ஆக்ரோஷமாக, அதிரடியாக என எதிரணியை எல்லா ரூபங்களிலும் கலங்கடித்தவர் அவர். கடைசி ஓவரின், கடைசி பந்து வீசும்போதும் வெற்றி பெறுவதற்கான கணக்குகள் அவர் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்திய அணியின் வெற்றி உச்சங்களில் அந்தக் கணக்குகளுக்கு தனி பங்கு உண்டு. அதனால்தான், இந்திய கிரிக்கெட்டின் முகமென்று தோனியை அழைத்து, பெருமிதம் கொண்டிருக்கிறது ஐ.சி.சி.

தோல்வி ஒருபோதும் வெற்றியாளர்களை வீழ்த்துவதில்லை. தோனி மட்டும் அதில் விதிவிலக்கானவரா என்ன? தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள் தோனி! 

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.