
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (I.C.C. - ஐ.சி.சி.) சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க வீரராக கருதி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும். அந்த வகையில் ஹால் ஆஃப் ஃபேமில் 7 புதிய பெயர்களை ஐ.சி.சி. இன்று (09.06.2025) அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்கள் பலர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி மேத்தீவ் கேய்டன், தோனி, க்ஹசிம் அம்லா, கிரேம் ஸ்மித், டேனியல் வெட்ரோரி, சனா மீர், மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டியலில் இடம்பெறும் 11வது இந்திய வீரராக தோனி இடம் பெற்றுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான எம்.எஸ்.தோனி, 2007 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக இந்தியை அணியை வழிநடத்தி சாம்பியன் பட்ட வெல்லச் செய்தார். மேலும், 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணியே வென்றது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனிக்கு கிரிக்கெட் விளையாட்டிற்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக ஹால் ஆஃப் ஃபேமில் தோனியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய எம்.எஸ்.தோனி, “உலகெங்கும் பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் ஹால் ஆஃப் ஃபேமில் என்னை சேர்த்ததை பெருமையாகக் கருதுகிறேன். தலைசிறந்த வீரர்களின் பெயர்கள் உள்ள பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பது அற்புதமான உணர்வாக உள்ளது. இந்த கௌரவத்தை என் வாழ்நாள் முழுவதும் போற்றி மகிழ்வேன்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.