Skip to main content

MI vs GT: சறுக்கிய ஹர்திக்; சாதித்த சுப்மன் கில்

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
MI vs GT ipl live score update gujarat titans wins

ஐ.பி.எல் 2024 இன் 5ஆவது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்குடையே அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய சஹாவை, பும்ரா தனது முதல் ஓவரிலேயெ துல்லியமான யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கி 19 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்து கேப்டன் கில்லுடன் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். இந்த இணை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில் 31 ரன்களில் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 17 ரன்களில் வெளியேறினார். பிறகு வந்த மில்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியாவின் அதிரடியான 22 ரன்கள் கைகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 6 ரன்களும், ரசித் கான் 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோயெட்ஸி 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோஹித்துடன் நமன் திர் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரட் காட்டிய நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் இம்பாக்ட் பிளேயராக டிவால்டு ப்ரீவிஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து குஜராத் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டிய வண்ணம் இருந்தனர்.

தலைமை பொறுப்பின் பாரம் இல்லாததால் ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ப்ரீவிஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த டிம் டேவிட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோயெட்ஸி 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குஜராத் அணி தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், ஜான்சன், மொஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில் வெற்றிகரமாக தனது கேப்டன்சியை துவக்கி உள்ளார். மும்பை அணிக்கு முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்ற மோசமான வரலாற்றை 12ஆவது ஆண்டாக தொடர்கிறது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.