Skip to main content

மேக்ஸ்வெல் பற்றி தவறாக பேசிய நபர்... கொந்தளித்த வருங்கால மனைவி!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

maxwel

 

 

மேக்ஸ்வெல் பற்றி தவறாக பேசிய நபரை அவரது வருங்கால மனைவியான வினி ராமன் கண்டித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் வினி ராமன் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது. வினி ராமன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். அதன்பிறகு, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வினி ராமன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வந்தார். அந்தவகையில், மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கரோனா காலத் தனிமை ஏற்படுத்திய வெறுமை குறித்தும், தற்போது நானும் அமீரகத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் சமீபத்தில் பதிவிட்டார்.

 

அந்த பதிவிற்கு கீழே ஒரு நபர், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த வெள்ளைக்காரரை கைவிட்டு விடுங்கள். அவருக்காக நீங்கள் பரிதாபப்பட வேண்டாம். ஒரு நல்ல இந்தியரை தேடிப் பிடியுங்கள் என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வினி ராமன், என்னிடம் இருந்து பதில் வரவேண்டும் என்பதற்காக நீங்கள் இவ்வாறு பதிவிட்டிருப்பது தெரிகிறது. நான் யாருடைய நிறத்தையும் பார்ப்பதில்லை. ஒருவரது நாடு, இனம் என எது குறித்தும் அறியாமல் என்னால் அன்பு காட்ட முடியும். இது முழுக்க முழுக்க என் விருப்பம் சார்ந்தது. இணையத்தில் உள்ள முகமில்லாத ஒருவரின் கருத்தை அடிப்படியாக வைத்து என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை" எனப் பதிவிட்டுள்ளார். வினி ராமனின் இந்த பதிவை மேக்ஸ்வெல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, 'உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் வினி ராமன்' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

மிரட்டிய மேக்ஸ்வெல்; அதிரடி ஆட்டத்தால் வெற்றியைப் பறித்த ஆஸ்திரேலியா!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

world cup 2023 australia afganistan maxwell double century cricket score update

 

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023இன் 39 ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (07.11.2023) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. குர்பாஸ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இப்ராஹிமுடன் இணைந்த ரஹ்மத் நிதானமாக ஆடினார். 30 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஷஹிதி 26, அஸ்மத்துல்லா 22, நபி 12 என வீழ்ந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறு பக்கம் இப்ராஹிம் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த ரஷித் கானின் அதிரடியான 35 ரன்கள் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடி சதமடித்த இப்ராஹிம் 129 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெடுகளும், ஸ்டார்க், ஜம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், வார்னர் 18 ரன்களிலும் வெளியேறினர். மார்ஸ் 24, இங்லிஸ் 0, லபுசேன் 14, ஸ்டாய்னிஸ் 6, ஸ்டார்க் 3 என அவுட் ஆக 91-7 என தடுமாறியது. அதன்பின் இணைந்த மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ் இணை பொறுமையாக ஆடத் தொடங்கியது. கொஞ்ச நேரம் பொறுமை காத்த மேக்ஸ்வெல், பின் தனது அதிரடியை காட்டத் தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர் சதத்தைக் கடந்தார். கம்மின்ஸ் அவருக்கு ரொடேட் செய்து தரும் வேலையை மட்டும் செய்தார். தொடர்ந்து ஆடிய மேக்ஸ்வெல்லுக்கு தொடையில் ஹார்ம்ஸ்டிரிங் ஏற்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டு ஆடினார்.

 

ஒரு சமயத்தில் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அணியின் வெற்றியை ஒன்றே இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கினார். வெறி கொண்டு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷஹிதி எவ்வளவோ பவுலர்களை மாற்றி, மாற்றி பார்த்தும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மிரட்டிய மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார். ஒரு ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.  இதற்கு முன் ஷேன் வாட்சன் எடுத்த 185 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 201 ரன்கள் குவித்து தனி ஆளாக வெற்றியை ஆப்கானிஸ்தானிடமிருந்து பறித்தார். அவருக்கு துணை நின்ற கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அபார வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 201 ரன்கள் அடித்து வெற்றி தேடித் தந்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

- வெ.அருண்குமார்

 

 

 

 

Next Story

"யார்க்கர் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர்"... இந்திய வீரரை புகழ்ந்த மேக்ஸ்வெல்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Maxwell

 

 

நடப்பு ஐபிஎல் தொடரில் யார்க்கர் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர் என்றால் ஷமிதான் என பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 4 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. தொடரின் தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்துவந்த பஞ்சாப் அணி, கடந்த 3 போட்டிகளில் தொடர் வெற்றிபெற்று அதிரடி எழுச்சி பெற்றுள்ளது. இவ்வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், ஷமியின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.

 

அதில் அவர், "நடப்பு தொடரில் யார்க்கர் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது ஷமிதான். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசினார். கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் அவர் பந்து வீசிய விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம். ஷமி அணிக்காக சிறப்பாக விளையாடிவருகிறார் அவருக்கு வாழ்த்துகள்" எனக் கூறினார்.