Skip to main content

உலகை தன் பக்கம் திரும்ப வைத்த குத்தகை விவசாயின் மகள்...

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலத்தில் உள்ள அளவில், ஒரு ஐந்து சதவீதம்கூட மற்ற எந்த விளையாட்டும் பிரபலத்தில் இல்லை. இதற்கு வணிகம் முதற்கொண்டு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், இங்கு மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், கிரிக்கெட்டில் குறைந்த அளவு பின்னணி கொண்ட ஒரு வீரரை தெரிந்த அளவுகூட, மற்ற விளையாட்டுகளில் உலக அளவில் சாதனை புரிந்த இந்திய வீரர்களை நாம் அறிந்திருக்கவில்லை. 

 

mm

 

 

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றாலும், தோற்றாலும் அது பட்டிதொட்டி வரை பரவும். ஆனால், மேரி கோம் போன்ற உலக சாம்பியன்கள் இன்னும் பிரபலமாகவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இப்படி ஒரு சாதனையாளர் இந்தியாவில் இருக்கிறார் என்பதே பலருக்கு தெரியாது. அவர் தன்னுடைய வாழ்வில் பல கடினமான சோதனைகளையும், கரடுமுரடான பாதைகளையும் கடந்துதான் இன்று உலகின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்ற இடத்தை அடைந்துள்ளார். 

 

இந்தியாவின் ஏழ்மை மாநிலங்களில் ஒன்றான மணிப்புரை சேர்ந்தவர் மேரி கோம். இவருடைய பெற்றோர் குத்தகை விவசாயம் செய்து வந்தனர். கோம் பள்ளிக்கு செல்லும்போதே தனது பெற்றோருக்கு தொழில்களில் உதவிவந்தார். அவரின் தந்தை முன்னாள் மல்யுத்த வீரர். பள்ளிகாலங்களிலேயே கோம் கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகள விளையாட்டு உட்பட பல வகையான விளையாட்டுக்களில் பங்கு பெற்றுவந்தார். டிங்கோ சிங் என்ற புகழ்பெற்ற இந்திய குத்துச்சண்டை வீரரின் சாதனைகளையும்,  முஹம்மது அலி வீடியோக்களைப் பார்த்தும் தன்னுடைய விருப்பத்தை தடகளத்திலிருந்து குத்துச்சண்டைக்கு மாற்றினார். 

 

2000-ஆம் ஆண்டிலிருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். மாநில அளவிலான சாம்பியன்ஷிப்பை வென்றார். ஆனால் அதுவரை அவர் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டதையும், போட்டிகளில் பங்கேற்பதையும் வீட்டிற்க்கு சொல்லவில்லை. குத்துச்சண்டை மிகவும் ஆபத்தான விளையாட்டு எனவும், காயங்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் எனவும் பெற்றோர் கருதினர். அவரது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் வெற்றிப் படங்களின் ஆவணங்களை செய்தித்தாள்களில் பார்த்தார் கோமின் தந்தை. கோமின் இந்த விருப்பத்திற்கு எதிரான மனநிலையில் அவரது தந்தை இருந்தார். ஆனால், மேரி கோம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் விருப்பத்தை மாற்றுவதாக இல்லை, பிடிவாதமாக இருந்தார். பெற்றோரை தன்வழிக்கு மாற்றினார். இறுதியில் தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் போட்டிகளில் பங்கேற்றார். 

 

 

mm

 

 

2001-ல் AIBA பெண்கள் உலக சாம்பியன்ஷிப் 48 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். அதே சாம்பியன்ஷிப் 45 கிலோ எடைப்பிரிவில் 2002-ல் முதல் இடம் பெற்று சாதித்தார். அன்று முதல் இன்றுவரை சாதனைகளை சர்வசாதரணமாக புரிய தொடங்கினார். சென்ற வாரம் உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடம் பிடித்தார். இது ஆறாவது முறையாக அவர்  உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் பெறும் தங்கம் ஆகும். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் அவருக்கு இணை யாரும் இல்லை என்ற அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார். 

 

கோமின் இந்த சாதனைகள் எளிதாக படைக்கப்படவில்லை. “நான் பாக்ஸிங் உலகில் அடியெடுத்து வைத்தபோது என்னுடைய முயற்சிகளை கேலி கிண்டல் செய்தவர்கள் அதிகம். ஒருபோதும் சாம்பியன் ஆக முடியாது. பெண்களால் பாக்ஸிங்கில் சாதிக்க முடியாது என்று கூறியவர்கள் ஏராளம். நான் தோல்வியுறும்போது என்னுடைய கதை முடிந்தது என்பார்கள். வெற்றிபெறும்போது அமைதி காப்பார்கள்” என்று மேரி கோம் ஒருமுறை தெரிவித்திருந்தார். 

 

ஒவ்வொரு முறையும் தனது திறமையையும், வலிமையையும் வெளிப்படுத்தி வந்தார். மகளிர் குத்துச்சண்டை இன்னும் பெரிய அளவில் அறியப்படாத நேரத்தில், மேரி தனது ஆர்வத்தை தொடர்ந்து இடைவிடாமல் உறுதியுடன் வெளிப்படுத்தி வந்துள்ளார். “நான் ஐந்து முறை உலக சாம்பியனாக இருக்கிறேன், ஆனால் எனக்கு இன்னும் தகுதியுற்ற ஸ்பான்ஸர் இல்லை; இந்தியாவில் பெருநிறுவன ஊக்கமளிப்பு அரிதானது அல்ல. ஒரு மனிதனாக மற்ற விளையாட்டு வீரர்கள் பெரும் நிதியுதவி அளவுக்கு தமக்கு கிடைக்காதபோது நான் வருத்தப்படுகிறேன்." என்று அவர் ஐந்தாவது முறை சாம்பியனானபோது கூறினார். 

 

மேரி ஆறு முறை உலக சாம்பியன். 2014-ல் இவரின் வாழ்க்கை படமாக வெளியிடப்பட்டது. அதில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். பத்ம பூஷன், அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றுள்ளார். ஏப்ரல் 26, 2016 அன்று, கோம் இந்திய ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதுபோன்ற பல விஷ்யங்களை சில இந்தியர்கள் மட்டுமே அறிவார்கள்.

 

மேரியின் உறுதியான தன்னம்பிக்கையை குறைப்பதற்காக மட்டுமே பல விமர்சனங்கள் வந்தன. ஆனால் விமர்சனங்கள், ஏழ்மை ஆகியவற்றை தாண்டி ஆர்வம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டியுள்ளார். சச்சினும், கோலியும் கிரிக்கெட்டில் சாதித்த அளவுக்கு, மேரி கோமும் குத்துச்சண்டையில் சாதித்துள்ளார். இன்றைய தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் அவர் ஒரு ரோல் மாடல். அவரின் போரட்டங்களும், சாதனைகளும் பலரின் வாழ்வில் பெரிய நம்பிக்கையையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

 


 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.