Skip to main content

கங்குலியின் கடைசி வருடம் எப்படி இருந்தது? - தோனியுடன் சின்ன கம்பேரிஷன்

Published on 19/07/2018 | Edited on 20/07/2018

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரில் வெற்றியையும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியையும் பதிவு செய்திருக்கிறது. இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள், அதைப் பூர்த்தி செய்யத் தவறியிருக்கும் வேளையில், மீண்டும் தோனி எப்போது ஓய்வை அறிவிக்கப்போகிறார், வயதாகிவிட்டது, இனிமேல் அவ்வளவுதான் போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
 

Ganguly

 

 

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து பேசுகையில், தோனிக்கு சரியான இடம்கொடுத்து அவரைக் களமிறக்கினால், அவர் அதைப் பயன்படுத்தி அணிக்கு பக்கபலமாக இருக்கவேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. ஒரு வருடமாக அணியில் இருந்தும் அவர் செய்வதெல்லாம் மிகக்குறைவுதான். ஒருவேளை உலகக்கோப்பைக்கான அணியில் அவர் இருந்தால் இன்னும் கூடுதலாக அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 
 

கடந்த ஒருவருடமாக அணியில் தோனியின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதே அவரது ஒட்டுமொத்த விமர்சனத்தின் மையக்கருத்தாக இருந்தது. இந்தக் கருத்து தோனி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உண்மையில், தோனி மீதான கருத்து உண்மையாக இருக்க வேண்டுமானால், இந்திய அணிக்காக கங்குலி விளையாடிக் கொண்டிருந்தபோது என்ன செய்தார் என்பதையும் விவாதிக்க வேண்டும்தானே என பலர் குறிப்பிட்டு வருகின்றனர். 
 

 

 

2008ஆம் ஆண்டு கங்குலி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 2004-2005 காலகட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலின் தலையீடு, ஆதிக்கம் என இந்திய அணியே ஆடிப்போயிருந்தபோது, நெருக்கடியில் இருந்த கங்குலி சரியாக விளையாடவில்லை. அது தன் வாழ்நாளின் இருள் நிறைந்த பக்கங்கள் என கங்குலியே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து சொதப்பலாக ஆடி விமர்சனங்களுக்கு ஆளான கங்குலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அப்போதைய சராசரி 41.02 ரன்கள். 


Dhoni

 

 

அதேசமயம், தோனியின் தற்போதைய சராசரி 51.25 ரன்கள். அதேபோல், கடந்த ஒரு ஆண்டாக தோனி என்ன செய்தார் என்ற விமர்சனத்தை முன்வைக்கும் கங்குலி, தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட அந்த ஒரு வருடமான 2004 செப்டம்பர் - 2005 செப்டம்பர் இடைவெளியில் 22 போட்டிகள் விளையாடி 545 ரன்கள் எடுத்திருந்தார். அவரது சராசரி 25.5 ரன்கள் மட்டுமே. 4 அரைசதங்கள் விளாசி ஒரேயொரு முறை மட்டுமே அவுட்டாகாமல் இருந்தார்.  
 

தோனியோ, ஜூலை 2017 - ஜூலை 2018 வரை தான் விளையாடிய 27 போட்டிகளில் 604 ரன்கள் அடித்திருக்கிறார். அவரது சராசரி 50.3 ரன்கள். அதே நான்கு அரைசதங்கள் விளாசிய தோனி, 8 போட்டிகளில் நாட்-அவுட்டாக இருந்தார். இதில் கவனிக்கவேண்டிய விஷயமே, தோனி களமிறங்கும் பேட்டிங் பொஷிஷன்தான். இதை தொடக்க நிலையில் விளையாடும் கங்குலி எப்படி உணராமல் போனார்?
 

ஒருசில போட்டிகள்தான் ஒரு வீரரின் தனித்திறமையைத் தீர்மானிக்க முடியும் என்றால், அது ஒட்டுமொத்த அணிக்கும் பாதிப்பையே தரும். இந்திய அணியை பல்வேறு உச்சங்களுக்குக் கொண்டுசென்ற கங்குலியும் அதை தெளிவாகவே அறிந்திருப்பார். 
 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.