இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி- 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது டி- 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் 5-வது ஓவரை வீசும் போது எவின் லூயிஸ் பேட்டில் பட்ட பந்து ரிஷப் பந்திற்கு கேட்சாக அமைந்தது. ஆனால் ரிஷப் பந்த் அந்த கேட்சை தவறவிட்டார்.
அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள், "தோனி, தோனி" என கோஷம் எழுப்பினர். ரிஷப் பந்த் கேட்சை தவறவிட்டால் தோனி, தோனி என்று கூச்சலிட வேண்டாமென்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதே கோலி ரசிகர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் மீண்டும் இப்படி கோஷம் எழுப்பப்பட்டதால் விரக்தியடைந்த கோலி, தனது கைகளை அசைத்து ஏன்? என்பது போல சைகை காட்டினார். கோலியின் இந்த செய்கை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.