Skip to main content

பேரழிவைத் தரும் 2 புதிய பந்து முறை : சச்சினுக்கு கோலி ஆதரவு

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

2 புதிய பந்துகளைப் பயன்படுத்துவதால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பேரழிவைச் சந்திப்பதாக சச்சின் தெண்டுல்கர் கூறிய கருத்துக்கு இந்திய கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். 
 

sachin

 

 

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 புதிய பந்துகளைப் பயன்படுத்துவது குறித்து சச்சின் தெண்டுல்கர், ‘2 புதிய பந்துகளைக் கொண்டுவந்த நடைமுறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பேரழிவுக்கு இழுத்துச் செல்லவே வழிவகுக்கும். அதனாலேயே பந்து அதன் தன்மை இழந்து, ரிவர்ஸ் ஸ்விங் ஆவதில்லை. ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒன்றை சமீபகாலமாக காணமுடியாததற்கும் அதுதான் காரணம். பேட்ஸ்மென்களைக் கட்டுப்படுத்தும் டெத் ஓவர்களையும் பார்க்க முடியவில்லை’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 
 

 

 

இங்கிலாந்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணி பேட்ஸ்மென்களின் சீற்றம், பாகிஸ்தான் அணி வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களை விளாசியது நடந்தது. இதுதான் எப்போதும் அமைதிகாக்கும் சச்சின் தெண்டுல்கர் முன்வந்து கருத்து தெரிவித்ததற்கு காரணமாக இருந்தது. 
 

Virat

 

 

 

சச்சின் தெண்டுல்கரின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்வார் யூனீஸ் ஆதரவளித்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இது முற்றிலும் பவுலர்களுக்கு எதிரான நடவடிக்கை. நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் பந்தின் தன்மை கடைசி சில ஓவர்களில் திணறடிக்கும். ஆனால், அப்படிப்பட்ட ஒன்று இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிட்சுகளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். 2 புதிய பந்துகளைப் பற்றி ஆராய்ந்த வரை, அது பவுலர்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கையே’ என சச்சினின் கருத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 
 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒரு புதிய பந்தைப் பயன்படுத்தும் முறையை ஐசிசி 2011ஆம் ஆண்டு கொண்டுவந்தது. ஐ.பி.எல். போட்டிகளைப் போல ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஏனெனில், ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் பந்தின் தன்மை மாறுவதால், வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதீத ஸ்பின் ஆகிய வித்தைகளைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால், பேட்ஸ்மென்கள் மிக சாதாரணமாக பவுலர்களை பந்தாடுகிறார்கள்.