Skip to main content

அன்று வில்லன்... இன்று மறைமுக ஹீரோ... தடுமாற்றம் டூ தடுப்பாட்டம்...

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

எதிரணிக்கான ஒரு இலவச விக்கெட், 10 வீரர்கள் மட்டுமே கொண்ட இந்திய அணி என 2018-ஆம் ஆண்டு பல விதமான மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார் கே.எல்.ராகுல். மேலும் ஆஸ்திரேலியா தொடரில் மிக மோசமாக விளையாடியதால் கே.எல். ராகுலுக்கு விமான டிக்கெட் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று ராகுல் மீது அதிக நம்பிக்கை கொண்ட கவாஸ்கரே கருத்து தெரிவித்தார். 

 

kl rahul in indian cricket team

 

 

2014-ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கே.எல்.ராகுல் முதல் இரண்டு வருடங்கள் சுமாராகவே விளையாடி வந்தார். தடுமாறி வந்த ராகுலுக்கு 2016-ஆம் ஆண்டு ஒரு பெரிய நம்பிக்கையும், கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது 2016-ஆம் ஆண்டு ஐபிஎல். அந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் கலக்கினார்.  

2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 இன்னிங்ஸ்களில் 397 ரன்கள், சராசரி 44.11, ஸ்ட்ரைக் ரேட் 146.49 என பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். அதற்கு பிறகு நடந்த ஜிம்பாப்வே தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் என 196 ரன்கள், சராசரி 196.00, ஸ்ட்ரைக் ரேட் 83.40 என அறிமுக ஒருநாள் தொடரிலேயே அசத்தினார்.  

அதே போல 2016-ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் 4 இன்னிங்ஸ்களில் 179 ரன்கள், சராசரி 89.50, ஸ்ட்ரைக் ரேட் 159.82, அதிகபட்சமாக 110* ரன்கள் எடுத்து இந்தியா அணியில் முக்கிய வீரராக உருவெடுத்தார். நல்ல ஃபார்மில் இருந்த ராகுல் 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை. அப்போது ஒரு நாள் போட்டிகளில் சரியான ஃபார்ம் இல்லாமல் 6 இன்னிங்ஸ்களில் 52 ரன்கள், சராசரி 8.67, ஸ்ட்ரைக் ரேட் 72.22.

2018- ஆம் ஆண்டு அவருக்கு தொடர் சோதனைகளை கொடுத்தது. இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ராகுலின் பேட்டிங் சராசரி 29.90. இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் சராசரி 18.50. ஆஸ்திரேலியா தொடரில் பேட்டிங் சராசரி 11.40. இதனால் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் ராகுலின் ஃபார்ம் குறித்து பல விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

அதிரடிக்கு பெயர்போன ராகுல் அதற்கு பிறகு நிதானமாக ஆட தொடங்கினார். தனது ஆட்டபாணியை சிறிது மாற்றினார். களத்தில் இறங்கியவுடன் அதிரடியாக விளையாடும் ராகுல், அந்த மோசமான பார்மிற்கு பிறகு தடுப்பாட்டத்தை கையில் எடுத்தார். ரிஸ்க்கான ஷாட்களையும், தேவையில்லாத ஷாட்களையும் ஆடுவதை தவிர்க்க தொடங்கினார். விக்கெட்டை விடாமலும், ரன்களை குறைவான வேகத்திலும் எடுத்து, பிறகு அதிரடி என ஆட்டபாணியை மாற்றிக்கொண்டார். 

இது இந்த வருட ஐபிஎல் தொடரிலும் இந்த ஆட்டபாணி எதிரொலித்தது. கடந்த ஐபிஎல் தொடரில் 500+ ரன்கள், 50+ சராசரி என கலக்கினார். கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்கு விளையாடிய ராகுல் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டபோது மீண்டும் பல விமர்சனங்கள் குவிந்தன. வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது ராகுல் அடித்த சதம் அவரின் உலகக்கோப்பை இடத்தை உறுதி செய்தது.

2-வது விக்கெட்டிற்கு களமிறங்கிய 2 போட்டிகளிலும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். யார் 4-வது பேட்ஸ்மேன் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தவானுக்கு ஏற்பட்ட காயம் அவரை தொடக்க வீரராக களமிறங்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதிலும் அசத்தினார்.

ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் இந்த தொடரில் குறைவு தான். ஆனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட்கள் விடாமல் ஆடுவது இங்கிலாந்து மைதானங்களில் மிகவும் அவசியம். அதை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். ரோஹித், கோலிக்கு தேவையான விதத்திலும், சூழ்நிலைக்கு ஏற்பவும் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொண்டார் ராகுல். 1 போட்டியை தவிர, மற்ற போட்டிகளில் சிறப்பாக பங்களித்துள்ளார். 

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 341 பந்துகளை சந்தித்து 249 ரன்கள், சராசரி 41.50, ஸ்ட்ரைக் ரேட் 73.02. இந்திய அணியில் தவானின் இடத்தை நிரப்பமுடியாது என்ற கருத்துக்கு தனது பேட்டிங் மூலம் பதில் அளித்துள்ளார் ராகுல்.அவரது பேட்டிங் சற்று கூடுதல் அதிரடியுடன் இதுபோலவே தொடர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. அன்று தொடர் தடுமாற்றத்தை சந்தித்த ராகுல், இன்று தொடர் தடுப்பாட்டத்தை ஆடி வருகிறார். இந்திய அணியின் வெற்றிகளுக்கு இந்த தொடரில் மறைமுக ஹீரோவாக பங்களித்து வருகிறார் ராகுல்.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.