Skip to main content

இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

kl rahul

 

 

நேற்றைய போட்டி இனிப்பும், கசப்பும் கலந்த அனுபவமாக இருந்தது என சூப்பர் ஓவர் தோல்வி குறித்து கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இடையேயான போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைக் குவித்தது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டோன்னிஸ் 53 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களும் குவித்தனர். 

 

பின்னர் 158 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக மயங் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இரு அணிகளும் சமநிலை வகித்ததை அடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடைபெற்றது.

 

அதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, டெல்லி அணி வீரர் ரபடாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அவ்வணி சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, இரண்டாவது பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

 

சூப்பர் ஓவரில் ஏற்பட்ட தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேசும்போது, "இது இனிப்பும், கசப்பும் கலந்த ஒரு அனுபவமாக உள்ளது. ஆட்டத்தின் 10-வது ஓவரில், போட்டி சமநிலையில்தான் முடியும் என்று நீங்கள் கூறியிருந்தால் ஏற்றிருப்பேன். இது முதல் போட்டிதான். இதன்மூலம் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். மயங் அகர்வால் நம்ப முடியாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றியை நோக்கி அணியை அவர் அழைத்து வந்த விதம் அற்புதமாக இருந்தது" என்றார்.

 

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கே.எல். ராகுல் ட்வீட்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

KL Rahul Twit was injured and underwent surgery

 

லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

 

தொடர்ந்து, காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் அறிவித்தார். அதேபோல் இந்தாண்டு நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 

இந்நிலையில் கே.எல்.ராகுல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிகிச்சை அனைத்தும் சீராக நடந்ததற்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வேகமாக குணமடைந்து வருவதாகவும் மீண்டும் களத்தில் இறங்கி எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது தானும் வேகமாக காயத்தில் இருந்து மீண்டு வருவேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.