Skip to main content

சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து பொல்லார்ட் கருத்து!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

Kieron Pollard

 

மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து பொல்லார்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய இளம் வீரரான சூர்யகுமார் யாதவ், ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பி.சி.சி.ஐ அறிவித்த வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள், மூத்த வீரர்கள் எனப் பலரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மும்பை அணியின் தற்காலிகக் கேப்டனாக செயல்பட்டுவரும் பொல்லார்ட், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "தொடக்க விக்கெட்டுகளை இழந்த பின்னும், சூர்யகுமார் யாதவ் அதே வேகத்தில் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும் சரி, தான் சிறந்த வீரர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அவரது ஆட்டம் உள்ளது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து உள்ளுக்குள் நிச்சயம் அதிருப்தியாக இருப்பார். அவரது ஆட்டத்திறன் ஒவ்வொரு போட்டியிலும் மேம்பட்டு வருகிறது. இதே மாதிரியான நிலையான ஆட்டத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தும் போது, நிச்சயம் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் கட்டத்தை அவர் நெருங்கிவிட்டார் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்" எனக் கூறினார்.

 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

விராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Suryakumar Yadav

 

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.