Kapil Dev

கடந்த ஐ.பி.எல் தொடரில் என்னுடைய நாயகன் நடராஜன்தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமீரகத்தில் நடைபெற்ற 13 -ஆவது ஐ.பி.எல் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். 15 போட்டிகளில் களமிறங்கிய நடராஜன் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், தன்னுடைய துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில், அவருக்கு இடம் கிடைத்தது. இந்தியா அணிக்காக தன்னுடைய முதல் போட்டியை விளையாடும் முனைப்போடு, தற்போது தீவிரப் பயிற்சியில் நடராஜன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் நடராஜன் குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Advertisment

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கபில்தேவ், "கடந்த ஐ.பி.எல் தொடரில் என்னுடைய ஹீரோ நடராஜன். இளம் வீரரான அவர் பயமில்லாமல் இருக்கிறார். நிறைய யார்க்கர்களை வீசினார். இன்று மட்டுமல்ல கடந்த 100 ஆண்டுகளாகவே யார்க்கர் வகை பந்துகளே சிறந்தது" எனக் கூறினார்.