Skip to main content

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: காயமில்லை ஆனாலும் விலகிய வில்லியம்சன் - காரணம் என்ன?

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

williamson

 

2021ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நாளை (17.11.2021) தொடங்குகிறது. முதலில் 3 இருபது ஓவர் போட்டிகளில் சந்திக்கும் இரு அணிகளும், அதனைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

 

இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்காக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, இருபது ஓவர் தொடரில் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் போட்டி, நாளை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Kane Williamson step down as Test captain

 

நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுகிறார் என்றும் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து வில்லியம்சன் கூறியதாவது, “நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம். அதில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகப் பணிகளைக் கொண்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இந்த முடிவிற்கு இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

நியூசிலாந்து அணியின் கேப்டனாக 40 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் 22 போட்டிகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அவரது 24 டெஸ்ட் சதங்களில் 11 சதங்கள் அவர் கேப்டனாக இருந்தபோது அடித்தவை.  

 

நியூசிலாந்து அணி அடுத்து பாகிஸ்தான் உடன் விளையாட உள்ள தொடருக்கு டிம் சௌதி தலைமைத் தாங்குவார் எனவும், துணைக் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் வீரராக அணியில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

india vs newzealand

 

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.

 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 325 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களுக்கு சுருண்டது. இதன்பின்னர் ஃபாலோ ஆன் தர வாய்ப்பிருந்தும் மீண்டும் பேட்டிங் செய்த இந்திய அணி, 276 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

 

இதன் காரணமாக 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய (05.12.2021) ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்தநிலையில், இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி, 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

ரன்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இது இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 14வது டெஸ்ட் தொடர் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.