Skip to main content

"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்" ஜடேஜா நெகிழ்ச்சி!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Ravindra Jadeja

 

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் கண்ட தோல்வி மூலம்  தொடரை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெரும் முனைப்போடு நேற்றைய போட்டியை எதிர்கொண்டது. முன்வரிசை வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆறாவது விக்கெட்டிற்கு இணைந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இணை 150 ரன்கள் சேர்க்க 50 ஓவரின் முடிவில் இந்திய அணி 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் முறையே 92 ரன்களும், 66 ரன்களும் குவித்தனர். இறுதிவரை பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

போட்டியின் முடிவில் ரவீந்திர ஜடேஜா பேசுகையில், "தோனி ஒருவகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எந்த வீரர்களோடு பேட் செய்தாலும் அவர்களோடு களத்தில் நின்றுவிட்டு, பின் அதிரடியாக விளையாட ஆரம்பிப்பார். அவர் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். தோனியுடன் இணைந்து பலமுறை பேட்டிங்கும் செய்துள்ளேன். நாம் கடைசி வரை நிலைத்து நின்றால், இறுதி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்க்கலாம் என்று என்னிடம் கூறுவார். நேற்றைய போட்டியிலும் அதே சூழல் தான் நிலவியது. அதன்படி, நானும் ஹர்திக் பாண்டியாவும் பேசி போட்டியை கடைசி கட்டம் வரை எடுத்துச் செல்ல முடிவெடுத்தோம். மைதானத்தில் ஒரு பக்கம் பவுண்டரி தூரம் மிகக்குறைவு, அதுதான் எங்கள் திட்டம்" எனக் கூறினார்.

 

 

Next Story

பேஸ்பால் டெஸ்டை பேட்டிங்கால் தகர்த்து சரித்திரம் படைத்த இந்தியா

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
ind vs eng bazball test match update india gets a historical win

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும்,  சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக  சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனால் அடுத்து களமிறங்கிய கில் பொறுப்புடன் ஆட இந்திய அணியின் ஸ்கோர் 196-2 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.

தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கில் மற்றும் குல்தீப் சிறப்பாக ஆடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் ஆடக் களமிறங்கினார். சிறப்பாக நைட் வாட்ச்மேன் இன்னிங்ஸ் ஆடிய குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார். இந்த இணை அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பாக மற்றும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ் கான் இணை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கானும் அரைசதம் கடந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 430 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறத் தொடங்கியது. இந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் சுழற்றி அடிக்கப்பட்டனர். அந்த அணியின் டாப் 4 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.  கேப்டன் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெயிலெண்டரான மார்க் வுட் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எனும் பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2022இல் நியூசிலாந்துக்கு எதிராக 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது மோசமான தோல்வியாகும். இதற்கு முன் 1934 இல் ஆஸி.க்கு எதிராக 562 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மிகவும் மோசமான தோல்வியாகும்.

மேலும் இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அடித்த சிக்சர்கள் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.  அவர் அடித்த 12 சிக்சர்கள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் எனும் வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சீரிஸில் 48 சிக்சர்கள் அடிக்கப்பட்டதன் மூலம் ஒரு சீரிஸில் அதிக சிக்சர் அடித்த அணி எனும் தன் சாதனையை இந்திய அணி, தானே முறியடித்துள்ளது.

- வெ.அருண்குமார்

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.