Skip to main content

உலகக்கோப்பையில் விளையாடப்போகும் இந்திய அணியின் 15 வீரர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது?

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 நாடுகளும் 150 கிரிக்கெட் வீரர்களும் விளையாடவுள்ளனர்.  இதில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்) ஷிக்கர் தவான், விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஷ்வேந்தர் சாஹல், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் விளையாடவுள்ளனர்.

 

hardik


இவர்கள் அனைவருமே தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக களமிறங்கி தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பின் மூலம் தங்களின் வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது என்பதைப்பற்றி பார்ப்போம்.
 

விராட் கோலி (கேப்டன்): ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விளையாடிய விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 464 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 141.46 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கோலி இரண்டு அரை சதங்களும் ஒரு சதமும் அடித்துள்ளார்.
 

ரோஹித் சர்மா (துணை கேப்டன்): மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய ரோஹித் சர்மா தனது தலைமை பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை பெற்று தந்துள்ளார். இவர் இந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 128.57 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 405 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் ரோஹித் சர்மா இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

dawan

 

ஷிக்கர் தவான்: டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கிய ஷிக்கர் தவான் உலகக்கோப்பையிலும் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த ஐ.பி.எல். தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய ஷிக்கர் தவான் 521 ரன்களை குவித்துள்ளார். இதில் ஐந்து அரை சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

விஜய் சங்கர்: ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கிய விஜய் சங்கர் 15 போட்டிகளில் 244 ரன்களை அடித்துள்ளார். இவர் சராசரியாக 40 முதல் 35 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 160+ என்பது குறிப்பிடத்தக்கது.

 

dhoni

 

எம்.எஸ்.தோனி: சென்னை அணியின் கேப்டனான தோனி இந்த தொடரில் 15 போட்டிகளில் 416 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 134.63. சென்னை அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார். 7 முறை 30+ ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார். மேலும் இந்த தொடரில் தோனி மூன்று அரை சதம் அடித்துள்ளார். தோனி அடித்த 111 மீட்டர் இமாலய சிக்ஸரே இந்த தொடரில் மிக உயரமான சிக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


கேதர் ஜாதவ்: மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களை எடுத்துள்ளார். சென்னையில் பஞ்சாப் அணியை சென்னை எதிர்கொண்டபோது ஜடேஜா எரிந்த பந்தை தடுக்க முயன்றார். அப்போது அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியே.
 

ஹர்திக் பாண்டியா: ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 191+ ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 402 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவர் 14 விக்கெட்களையும் 11 கேட்ச்களையும் பிடித்துள்ளார். குறிப்பாக இந்த தொடரில் 17 பந்துகளில் அரை சதம் அடித்து இந்த தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.
 

முகமது ஷமி: வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி பஞ்சாப் அணிக்காக விளையாடி இந்த தொடரில் 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது எகனாமிக் ரேட் 8.68.

 

jasprit

 

ஜஸ்ப்ரித் பும்ரா: உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரில் ஒருவரான ஜஸ்ப்ரித் பும்ரா இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பந்து வீச்சாளரில் மிக முக்கியமானவர். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய இவர் 19 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக இவரின் எகனாமிக் ரேட் 6.63 என்பது குறிப்பிடத்தக்கது.
 

புவனேஷ்வர் குமார்: உலகக்கோப்பை தொடரில் அடுத்த முக்கியமான வேகப்பந்து வீச்சாளரில் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். சன்ரைஸஸ் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் இந்த ஐ.பி.எல் தொடரில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுவே கடந்த 2017-ம் ஆண்டு தொடரில் 26 விக்கெட்களையும் 2016-ம் ஆண்டு தொடரில் 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

குல்தீப் யாதவ்: சுழல் பந்து வீச்சீல் மிகமுக்கியமான வீரர் குல்தீப் யாதவ். இவர் இந்த ஐ.பி.எல். தொடரில் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
 

யுஷ்வேந்தர் சாஹல்: இவர் இந்த ஐ.பி.எல் தொடரில் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ஐ.பி.எல். போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய 14 வது வீரர் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினேஷ் கார்த்திக்: தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 97 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். இருந்தபோதிலும் இவர் இந்த தொடரில் எடுத்தது 253 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரண்டு அரை சதம் அடித்துள்ளார்.
 

கே.எல்.ராகுல்: கே.எல்.ராகுல் இந்த தொடரில் 593 ரன்கள் எடுத்து வார்னருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். குறிப்பாக இந்த தொடரில் ஆறு அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.
 

ரவீந்திர ஜடேஜா: ஆல் ரவுண்டரான ரவிந்தர் ஜடேஜா இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதிலும் பந்து வீச்சு பிரிவில் இவரின் பங்கு அதிகம். இந்த தொடரில் மொத்தம் 15 விக்கெட்களை எடுத்துள்ளார். குறிப்பாக இவரின் எகானமி ரேட் இவரின் பலத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் 6.35 எகானமி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பரிதாப நிலை!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
5-time champions Mumbai Indians team's pathetic condition for hatrick loss

ஐபிஎல் கிரிக்கெட் 2024 இல் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், இஷான் கிஷன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் ப்ரிவிஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, திலக் வர்மா 29 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திய சஹால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அதன்படி தொடக்க வீரரான யஷ்ல்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை விளையாடிய ரியான் பராக் அதிகபட்சமாக 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து 54 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளோடு ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் தொடங்கி 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 1 வெற்றி முதல் 2 வெற்றி வரை பெற்று புள்ளிப்பட்டியலில் போட்டி போடத் தொடங்கியுள்ளன. ஆனால் 5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது.