Skip to main content

ரஷித்கான் தூக்கத்தைக் கெடுத்த கெட்ட கனவு! - ஐ.பி.எல். போட்டி #25 

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

ஐ.பி.எல். 11ஆவது சீசனின் 25ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

 

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இதுவாகும். புள்ளிப்பட்டியலைப் பொருத்தவரை பஞ்சாப் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஐதராபாத் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மொகாலி மைதானத்தில் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது.

 

ஐதராபாத் அணி மும்பையுடனான முந்தைய போட்டியில், வெறும் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது அசாதாரணமான பந்துவீச்சால் மும்பை அணியை 87 ரன்களில் ஆல்-அவுட் ஆக்கி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இத்தனைக்கும் ஐதராபாத் அணியின் முக்கியமான பவுலர் புவனேஷ்வர் குமார் அன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. நான்கு ஓவர்கள் வீசிய ரஷித் கான் ஒரு ஓவர் மெய்டனுடன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 11 ரன்களே கொடுத்திருந்தார். 

 

அதேசமயம், பஞ்சாப்புடன் ஐதராபாத் அணி மோதிய முதல் போட்டியில், கிறிஸ் கெயில் சதமடித்தார். அதுதான் இந்த சீசனின் முதல் சதம். அந்தப் போட்டியில் ரஷித்கான் தான் வீசிய நான்கு ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்திருந்தார். இதுதான் ரஷித்கான் டி20 போட்டியில் கொடுக்கும் அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 55 ரன்களில் கிறிஸ் கெயில் மட்டும் ஆறு சிக்ஸர்கள் விளாசி 42 ரன்கள் எடுத்திருந்தார். உண்மையில் அந்தப் போட்டி ரஷித்கானுக்கு கெட்டக்கனவாக இருந்திருக்கக் கூடும். இன்றும் அந்த அணிகள் மோதுகின்றன. தனது பிழைகளை சரிசெய்து கொண்டு ரஷித் கான் மீண்டும் களமிறங்குவார் என நம்பலாம். போட்டியின் முடிவுக்காக காத்திருப்போம்.

 

 

Next Story

ஐபிஎல் சூதாட்டத்தால் பலியான கோவை இளைஞர்!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Coimbatore youth passed away by IPL gambling


ஐபிஎஸ் சூதாட்டத்தில் பல லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம். 35 வயதான இவர், கார் டீலர் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சபாநாயகம் கடந்த 14 ஆம் தேதியன்று கோவைக்கு தன்னுடைய தொழில் சம்பந்தமாக வந்துள்ளார். அப்போது, தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் காலை சபாநாயகத்தின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. அந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை.

 

அதன்பிறகு சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த அறையின் பாத்ரூமில் சபாநாயகம் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், சபாநாயகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, சபாநாயகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார் சபாநாயகத்தின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

 

அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சபாநாயகம், அதில் சுமார் 90 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்பதும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த தற்கொலை குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

First win for Chennai Super Kings!

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள டாக்டர் பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் (Dr DY Patil Sports Academy) இன்று (12/04/2022) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. 

 

பின்னர், 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.