Skip to main content

இந்த சீசனிலும் டெல்லி அணிக்கு கடைசி இடம்தானா? - ஐ.பி.எல். போட்டி #42

Published on 10/05/2018 | Edited on 11/05/2018

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 11 சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் 42ஆவது போட்டி இன்று டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வைத்து நடக்கும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. 

dd

 

 

புள்ளிப்பட்டியலில் நேரெதிர் திசைகளில் இருக்கும் இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி மட்டுமின்றி, மீதமிருக்கும் மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது டெல்லி அணி. 

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் பொருத்தவரை, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை அணியிடம் தோற்றதற்குப் பிறகு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றிபெற்றிருக்கிறது. அந்த ஐந்து போட்டிகளிலும் ஐ.பி.எல். போட்டிகளுக்கே உரித்தான அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பொழுதுபோக்குகளை பார்வையாளர்களுக்கு ஐதராபாத் அணி தந்துவிட்டது எனலாம். இன்றோடு நான்கு போட்டிகளில் விளையாட இருக்கும் அந்த அணி, இன்னும் ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும் என்பதால், பிரச்சனையெல்லாம் டெல்லி அணிக்குதான்.

 

srh

 

 

மற்ற சீசன்களை ஒப்பிடும்போது தற்போது மிகச்சிறந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும் டெல்லி அணி, கடந்த கால ஆட்டங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. காலின் மன்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட், பிரித்வி ஷாவ், ட்ரெண்ட் போல்ட் மற்றும் அமித் மிஷ்ரா என தரமான வீரர்களை வைத்துக்கொண்டும் அந்த அணி இன்னமும் சீசனையே தொடங்கவில்லை.

 

இன்னும் குறிப்பாக சொன்னால், கடந்த ஐந்து சீசன்களிலும் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல்களில் டெல்லி அணி ஆறாவது இடத்திற்கு மேல் முன்னேறியதே இல்லை. அதிலும் மூன்று முறை கடைசி இடத்தைப் பிடித்ததைத் தவிர அந்த அணிக்கென்று பெரிய வரலாறு கிடையாது. அடுத்த நான்கு போட்டிகளுக்குள்  புதிய வரலாறை அந்த அணியால் படைக்க முடியும் என்று நம்பினால் அதுவே மிகப்பெரிய மாற்றம்தான்.

 

 

Next Story

தங்கராசு நடராஜனை தங்கத்தால் ஜொலிக்க வைத்த சன் ரைசர்ஸ்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 Sunrisers made Thangarasu Natarajan shine with gold!

தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.