Skip to main content

மூணு வருஷமா மும்பையிடம் ஜெயிச்சதே இல்ல! - ஐ.பி.எல். போட்டி #41

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

mi

 

இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, மீதமிருக்கும் எல்லா போட்டிகளிலும் ஜெயித்தாக வேண்டிய முக்கியமான கட்டத்தில் புத்துயிர் பெற்றிருக்கிறது. எந்தெந்த இடத்தில் எல்லாம் பிழைகள் இருப்பதாகத் தெரிந்ததோ, அது எல்லாவற்றையும் ஓரளவிற்கு சரிசெய்துகொண்டு மும்பை அணி தொடரை புதிதாகத் தொடங்கியிருக்கிறது.

 

 

 

அதேசமயம், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கடைசியாக மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தோற்றது. இன்று, தன் சொந்த மண்ணில் அதே மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதிய 22 போட்டிகளில் மும்பை அணி 17 ஆட்டங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல், இன்றைய போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் களமிறங்கிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றிபெற்றிருக்கிறது. 

 

அதிலும் குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு கொல்கத்தா அணி இதுவரை ஒருமுறை கூட மும்பை அணியை வீழ்த்தியதே கிடையாது. ஒருவேளை அதே நிலைமை இன்றைக்கு வந்தால்கூட, புள்ளிப்பட்டியலில் தற்காலிகமாக எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், அதுவே தொடரப்போவதில்லை என்பதை கொல்கத்தா அணி கணக்கில் கொள்ளவேண்டும். 

Next Story

ஒரு ஆட்டம், இவ்வளவு சாதனைகளா? கலக்கிய கொல்கத்தா அணி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
dc vs kkr record break victory for kolkata

ஐபிஎல் 2024இன் 16ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன் பேட்டிங்கின் அதிரடியால் டெல்லி அணி நிலை குலைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் விண்ணைப் பார்த்தபடியே இருந்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கொல்கத்தாவின் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின.

2023 இல் நரைன் துவக்க ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ஆனால், மூன்று போட்டிகளிலும் சொதப்ப, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இந்த முறை கம்பிரின் துணிவான முடிவால் மீண்டும் நரைன் மீது நம்பிக்கை வைத்து துவக்க வீரராக களமிறங்க வைத்தார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இருந்தாலும் மீண்டும் நம்பிக்கை வைத்து அவரையே களமிறக்க முடிவு செய்தார் காம்பிர். அந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் முத்தாய்ப்பாக 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் இமாலய ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு துணையாக ரகுவன்சி 27 பந்துகளில் 54 ரன்களும், ரசல் 41 ரன்கள், ரிங்குவின் 26 ரன்கள் என அதிரடி கூட்டணியின் அசர வைத்த பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர், 273 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன்ரேட் தாறுமாறாக எகிறி +2.518 என முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 272 பதிவாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 18 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக டி20 வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 14 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா சார்பில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற ரசலை சமன் செய்துள்ளார்.

Next Story

ஆர்.சி.பி அணியை அதிரடியால் கலங்க வைத்த கொல்கத்தா!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kolkata registers a great victory

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, பட்டாசு வெடிப்பது போல் மைதானத்தில் பவுண்டரி மற்றும் சிக்சர்களால் கொல்கத்தா வீரர்கள் வாணவேடிக்கை நிகழ்த்தினர்.  சால்ட், நரைன் துவக்கமானது அதிரடியாக அமைந்தது. நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயரும் தன் பங்கிற்கு காட்டடி அடித்தார்.

சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் அதிரடியைத் தொடர்ந்த வெங்கடேஷ் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பேட்டிங்கில் கலக்கி, பவுலிங்கிலும் ஒரு விக்கெட் எடுத்த நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.