Skip to main content

வங்கதேசத்திடம்  இந்திய அணி தோல்வி!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Indian team lost to Bangladesh!

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் சம்பிரதாயமாக நடந்த இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது என  நினைத்த ரசிகர்களை, நேற்றைய வங்கதேச அணியின் ஆட்டம் இருக்கை நுனியில் அமர வைத்தது. 

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று (15-09-2023) இந்தியா-வங்கதேச அணிகள் பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். வங்கதேச அணி சார்பில் தொடக்கத்தில் தன்சித் ஹசன்-லிட்டன் தாஸ் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்திலே வங்கதேச அணி தனது முதல் விக்கெட்டை இழந்து தடுமாறத் தொடங்கியது. ஆம், 5.4 ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில், லிட்டன் தாஸ் டக் அவுட் ஆக, தன்சித் 13 ரன்களும், அனமுள் ஹேக் 4 ரன்கள் என வெளியேறினர். இப்படி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணியை மீட்டெடுக்க அணியின் கேப்டன் சகிப் களமிறங்கினார். சகிப் மற்றும் மேஹிடி ஹசன் கூட்டணி அமைத்து ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆனாலும், ஒரு கட்டத்தில் மேஹிடியால் சகிப்பிற்கு ஈடு கொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் அவர் 13.6 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய அணியின் அதிரடி வீரர் தௌஹிட் ஹ்ரிடாய் சிறப்பாக விளையாட வங்கதேசம் சரிவில் இருந்து மீண்டது. ஒரு புறம் சகிப் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விலாச, தௌஹிட் நிதானமாக துணை நின்று விளையாடினார். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை சேர்த்து அசத்தியது. 

 

சிறப்பாக விளையாடிய சகிப் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கையில், 80 ரன்கள் எடுத்து சர்துல் தாக்குரின் வேகப் பந்தில் கிளீன் பவுல்ட் ஆனார். இவர், 6 பவுண்டரிகள், 3 சிச்கர் என விளாசினார். பின்னர், களமிறங்கிய ஷமீம் ஹோசைன் 1 ரன்கள் எடுத்து வெளியேறியதால் வங்கதேசம் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. அடுத்து விளையாட வந்த நசும் அஹ்மத் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை தரும் வகையில் விளையாடினார்.

 

200 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த வங்கதேசம் அணி திடீரென ஹ்ரிதாய் விக்கெட்டை இழந்தது. நிதானமான ஆடிய அவர், 54 ரன்கள் சேர்த்தார். இப்படி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேற வங்கதேசம் 193 ரன்களுக்கு 7 வீரர்களை இழந்து நின்றது. இருந்தும் நசும் அஹ்மத் இறுதியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார், பின்னர், மஹேடி அசன், தன்சீம் இருவரும் இறுதி வரை களத்தில் நின்று 9 ஆவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில், ஷர்துல் தாக்கூர்,முகமது சமி தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

 

266 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் ரோகித் சர்மா-சுப்மன் கூட்டணி இறங்கியது. இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தின் 2வது பந்திலே டக் அவுட் ஆகினார். பின்னர், தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வந்தார் திலக் வர்மா. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார். அடுத்து 3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களம் கண்டார். இவர் சுப்மன் கில்லுடன் இணைந்து கூட்டணி அமைக்க இந்திய அணியின் ரன்கள் சற்று கூடியது. இதனால், இந்த இருவர் கூட்டணி 50 ரன்களை எடுத்தது. நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கிய நிலையில் ராகுல் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடி வீரர் இஷான் கிஷன் களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 94 ரன்களுக்கே 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இப்படி தொடர்ந்து இந்திய வீரர்கள் அவுட் ஆகி சென்றாலும் சுப்மன் மறுபுறம் அற்புதமாக விளையாடி அரை சதம் அடித்தார். இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி சற்று நம்பிக்கை அளித்தார். பின் அவரும் 26 ரன்களில் சகிப் பந்தில் பவுல்ட் ஆனார்.  


இவரைத் தொடர்ந்து ஜடேஜா கலம்கண்டு 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், சுப்மன் கில் மட்டும் வங்கதேச பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவர், 133 பந்துகளில் 121 ரன்களை குவித்தார். அதில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். பின்னர், அவரும் 43.4 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இருந்தும் அக்சர் படேல் களத்தில் இருந்தது நம்பிக்கை அளித்தது. ஆனால், அவருடன் விளையாடிய சர்துல் தாகூர் 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பின்னர், முகமது சமி களமிறங்கினார். அக்சர் படேல் தன்னால் முடிந்த வரை போராடி 42 ரன்கள் சேர்த்தார் அவுட் ஆக வெற்றி வாய்ப்பு இந்திய அணியிடம் இருந்து நழுவியது. 

 

முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் சேர்த்தது. இதனால், வங்க தேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச பவுலிங்கில் ,முஸ்டபிசூர் 3 விக்கெட்டுகளையும், தன்சிம், மஹேடி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும், சகிப்பும், மேஹிடி ஹசனும் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை சகிப் ஹல் ஹசன் பெற்று கொண்டார். நாளை (17-09-2023), இந்தியா-இலங்கை ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும்.

 


 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.