Skip to main content

இந்தியா vs இங்கிலாந்து : இந்தியா எதிர்கொள்ளும் மூன்று பிரச்சனைகள்!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக மிகச்சிறப்பான டி20 தொடரை நிறைவு செய்திருக்கிறது. 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றதன் மூலம், வலுவான அணி என்ற உத்வேகத்துடன் நாளை தொடங்கவிருக்கும் ஒருநாள் தொடரிலும் இந்திய அணி களமிறங்கும் என நம்பலாம்.
 

 

 

இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்படக் கூடியது. ஆனால், தற்போதைய நிலையில், உலகில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்துடன் மோதுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம். குறிப்பாக இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடரில் அது சந்திக்க இருக்கும் மூன்று பிரச்சனைகள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம். 
 

indian

 

 

பார்ட் டைம் பவுலர் யார்?
 

அம்பத்தி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டிருந்தால் பகுதி நேர பந்துவீச்சாளர் இருந்திருக்க மாட்டார். தற்போது அணியில் ரெய்னா இருக்கிறார். ஆனால், அவரையே ப்ளேயிங் லெவனில் எடுப்பார்களா என்பது சந்தேகம்தான். டி20 தொடரைப் போலவே ஒருநாள் தொடரிலும் ஐந்து பவுலர்களை இந்திய அணி களமிறக்கும். ஆனால், ஐந்து பேருமே சிறப்பாக ஆடுவார்கள் என்பதில் எந்த உறுதியும் கிடையாது. இக்கட்டான சூழலில் எக்ஸ்ட்ரா இருக்கும் பகுதிநேர பவுலரை வைத்து சூழலை சுமூகமாக்கலாம். 
 

அதேசமயம், ரெய்னாவை பகுதிநேர பவுலராக கணக்கில்கொண்டு இறக்கினால், நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அணியில் சேரமுடியாத நிலை ஏற்படும். ஆக, பகுதிநேர பவுலர் நெருக்கடி என்பது இந்தியாவின் பேட்டிங் தரப்பையும் பாதிக்கும்.
 

வேகப்பந்து வீச்சாளர்களின் உடல்தகுதி
 

கணுக்கால் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா ஏற்கெனவே இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிவிட்டார். முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் புவனேஷ்வர் குமார் கடைசி டி20 போட்டியில் இறங்கவில்லை; ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தே அவரை ஓய்வும், முதுகுவலியும் வாட்டி வதைத்தன. 
 

 

 

அதேபோல், ஒருநாள் தொடர் முடிந்ததும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும் என்பதால், அவர்கள்து உடல்தகுதி என்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியது. இதற்காக புவனேஷுக்கு ஓய்வளித்தால் ஷ்ரதுள் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய அனுபவமற்ற வீரர்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கும். 
 

உமேஷ் யாதவும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். அவருக்கும் ஓய்வும், உடல்தகுதியும் அவசியம் என்பதால், இந்தியாவுக்கு வேகப்பந்து செக்டார் கடும் நெருக்கடியைத் தரும். 
 

indian

 

 

நம்பர் 4-ல் களமிறங்கப் போவது யார்?
 

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் பேட்டிங் லைனப்பில் 4ஆவது இடத்தை அரை டஜன் வீரர்களை வைத்து சோதித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் அந்த இடம் புதிய ஒருவரால் நிரப்பப்படும். தென்னாப்பிரிக்க தொடரில் அந்த இடத்தில் விளையாடிய அஜிங்யா ரகானே இந்தத் தொடரில் இல்லை. 
 

இந்தியாவில் சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் இருந்தாலும் அவர்கள் அந்த இடத்திற்கு பொருத்தமானவர்களா என்றால் இல்லை என்பதே பதில். விராட் கோலி அந்த இடத்திற்கு நகரலாம்; ஆனால், 3ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடும் அவரைத் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. ஆக, கே.எல்.ராகுலை அந்த இடத்தில் களமிறக்கி சோதித்துப் பார்க்கலாம். உலகக்கோப்பைக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், அந்த இடத்தில் நிரந்தரமாக விளையாடும் ஒருவரைக் கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. 
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.