Skip to main content

பேட்டிங், பவுலிங்கில் நம்பர் 1... ஆனால் ஆல்ரவுண்டரில்...?

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் ரோஹித் ஷர்மா, தவான், கோலி, ராயுடு, தோனி ஆகியோர் உலகக்கோப்பை அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவர்கூட பந்துவீசுவதில்லை. அதேபோல பும்ரா, சமி, குல்தீப், சாஹல் போன்ற பவுலர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு அளிப்பதில்லை. புவனேஷ் மட்டும் ஓரளவு பேட்டிங்கில் பங்களிப்பார். 

 

all rounder

 

5 பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதில்லை. பந்து வீசும் 4 வீரர்கள் பேட்டிங் செய்வதில்லை. பேக்அப் பேட்ஸ்மேன்களான ராகுல், பண்ட் ஆகியோரும் பேட்டிங் மட்டுமே விளையாடுவார்கள். கேதர் ஜாதவ் பார்ட் டைம் பவுலராக செயல்பட்டு வருகிறார். நான்கு பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் அணியில் இடம்பெறும் நிலையில் 6-வது பந்து வீச்சாளராக பார்ட் டைம் பவுலர் ஒருவர் மட்டுமே இருப்பது இந்திய அணிக்கு பலவீனமாக அமையும். 
 

தற்போது ஹர்திக் பாண்டியா மட்டுமே இந்திய அணியில் பெயர் சொல்லும்படி ஆல்ரவுண்டராக இருக்கிறார். விஜய் சங்கர் பேக்அப் ஆல்ரவுண்டராக உள்ளார். ஜடேஜா அணியில் இடம்பெற்றால் பவுலிங் ஆல்ரவுண்டராக விளையாடுவார்.
 

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், நம்பர் 1 பவுலர் என மாஸ் காட்டும் இந்திய அணி ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் சிறப்பாக இல்லை. பேட்டிங் தரவரிசை பட்டியலில் கோலி, ஷர்மா, தவான் என முதல் 15 இடங்களில் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். அதேபோல பந்துவீச்சில் பும்ரா, குல்தீப், சாஹல் என 3 பேர் உள்ளனர். ஆனால் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 15-ல் ஒருவர்கூட இந்திய அணி வீரர் இல்லை. 
 

allrounder

 

இந்திய அணியை தவிர மீதமுள்ள 10 அணிகளின் வீரர்கள் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 15 இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து-4, ஆப்கானிஸ்தான்- 2, பாகிஸ்தான்-2, தென் ஆப்பிரிக்கா-1, ஆஸ்திரேலியா-1, இலங்கை-1, ஜிம்பாவே-1, வெஸ்ட் இண்டீஸ்-1, நியூசிலாந்து-1, பங்களாதேஷ்-1 என முதல் 15 ஆல்ரவுண்டர் இடங்களை இந்த 10 அணியின் வீரர்கள் பிடித்துள்ளனர். 
 

ரஷித் கான், முஹம்மது நபி ஆகியோரின் பங்களிப்பின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முன்னேறி சிறந்த அணியாக மாறி வருகிறது.  இங்கிலாந்து அணியில் மொயின் அலி, க்ரிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், பேன் ஸ்டோக்ஸ் என ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு தான் உலகின் நம்பர் 1 இடத்திற்கு காரணமாக உள்ளது.      
 

இந்திய அணியில் இதுவரை பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக கலக்கியது கபில் தேவ் மட்டுமே. 225 போட்டிகளில் 3783 ரன்கள், 253 விக்கெட்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு பல ஆல்ரவுண்டர்கள் விளையாடினாலும் ஒரு சில வருடங்கள் மட்டுமே அணிக்கு விளையாடி வருகின்றனர். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் போல அணியில் நிரந்தரமாக விளையாடுவதில்லை. அஜீத் அகர்கர், இர்பான் பதான் ஆகியோர் ஆல்ரவுண்டர் திறமை இருந்தும் முழுவதுமாக ஆல்ரவுண்டர்களாக ஜொலிக்கவில்லை. பின்னி, ரிஷி தவான் என சிலர் அணியில் இடம்பெற்றாலும் குறுகிய காலம் மட்டுமே விளையாடினர்.  
 

allrounder


2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி பல ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் விளையாடினாலும் அவர்கள் பங்களிப்பு அணிக்கு போதுமானதாக இல்லை. ஸ்டுவர்ட் பின்னி, ரிஷி தவான் ஆகியோர் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடித்த மீடியம் பாஸ்ட் ஆல்ரவுண்டர்கள். ஆனால் அவர்கள் அணியில் இடத்தை தக்கவைக்க முடியவில்லை. 
 

உலகக்கோப்பைக்கு 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் காயம் காரணமாக பாண்டியா சில தொடர்களாக அணியில் இடம்பெறாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோர் ஆஸ்திரேலியா தொடரில் ஆல்ரவுண்டராக பங்களிப்பது இந்திய அணிக்கு மிகவும் அவசியமாக உள்ளது.

 

 

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.