Skip to main content

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா ?

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

2018 ஆம் ஆண்டுக்கான பிபா உலக கோப்பை போட்டி நாளை தொடங்க உள்ளது. இதனால் உலகம் முழுவதும் இருக்கும் கோடான கோடி ரசிகர்கள் விளையாட்டு போட்டிகளை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டியில் இந்தியா தேர்வாகவே இல்லை, இருந்தாலும் இந்தியாவில் அதிகப்படியான கால்பந்தாட்ட ரசிகர்கள் இருப்பதனால் இந்தியாவிலும் கால்பந்து பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டின் மாயவலையினால் கால்பந்தின் நிழல் மட்டும்தான் தெரிகிறது என்று கூட சொல்லலாம். இந்தியாவில் கால்பந்து விளையாட்டும், பார்க்கப்படும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவும் வருங்காலங்களில் பிபா உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்ற பலரின் எண்ணம் நிறைவேறும் என்று நம்புவோம். இதுவரை இந்தியா கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியதே இல்லையா? என்று வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் 1950 ஆண்டு பிரேசிலில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா கலந்துகொள்ள இருந்திருக்கிறது. ஆனால், போட்டிகள் தொடங்க இருக்கும்போது அதிலிருந்து விலகிக்கொண்டது.

 

arena

 

இந்தியா பிரேசில் உலகக்கோப்பையில் கலந்துகொள்ள காரணமாக இருந்தது பல நாடுகளின் அணிகள் அதில் கலந்துகொள்ளவில்லை, ஆதலால் இந்தியாவை நீங்கள் விளையாடியே ஆக வேண்டும் என்று அழைத்தனர். அப்போது இந்தியா குரூப் மூன்றில் சுவீடன், இத்தாலி மற்றும் பராகுவே அணிகளுடன் களம் இறங்க இருந்தது. 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பராகுவே வுடன் முதல் போட்டியை தொடங்கி ஜூலை 13 ஆம் தேதியில் முடிவதாக அட்டை பட்டியலிடப்பட்டிருந்தது. ஸ்காத்லாந்து, பிரான்ஸ் மற்றும் செக்கோஸ்லோவேகியா போன்ற எந்த அணிகளும் கலந்துகொள்ளாததால் 13 அணிகளே கலந்துகொள்வதாக இருந்தது. அதிலும் ஆசியாவில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த அணியும் கலந்துகொள்ளவில்லை. பிரேசில், இந்தியாவை அவர்கள் நாட்டுக்கு அழைத்து வருவது போன்ற அனைத்து செலவுகளையும்  ஏற்று கொள்வதாக இருந்தது. 

 

indian football team

 

கடைசியில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்தியா போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே விலகிக்கொண்டது. பல வருடமாக இதற்கு காரணமாக, இந்திய வீரர்கள் காலணி அணிந்து ஆடமாட்டார்கள் என்று சொன்னதாக ஒரு வதந்தி உண்டு. மேலும் நிதி பற்றாக்குறை, பயிற்சி இன்மை என்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. அதிலிருந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தேர்வாகவே இல்லை. ஒருவேளை இந்தியா அந்த போட்டியில் கலந்துகொண்டிருந்தால் அதுவே ஒரு உத்வேகமாக உருவெடுத்து காலப்போக்கில் ஒரு நல்ல அணியாக மாறியிருக்க கூடும். ஆனால், தற்போது வரை இந்தியா உலகக்கோப்பையில் கலந்துகொள்வதே கேள்விக்குறியாக தான்  இருக்கிறது.                                 

Next Story

10 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்தப்பட்ட ரொனால்டோ, மெஸ்ஸி...

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

bal

 

கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பலோன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த விருதை கடந்த 2008 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவருமே மாற்றி மாற்றி பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு குரோஷிய அணி வீரர் லூக்கா மோட்ரிக் இந்த விருதினை பெற்றுள்ளார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டார் இவர். விருது பெற்ற பின் பேசிய இவர், விருதை பெற காரணமாக இருந்த பயிற்சியாளர், அணி நிர்வாகம் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.  பெண்கள் பிரிவிற்கான இந்த விருதை 23 வயது நிரம்பிய நார்வே வீராங்கனை அடா ஹெகெர்பேர்க் பெற்றார்.

 

 

Next Story

பிஃபா சிறந்த வீரராக குரோஷியாவின் கேப்டன்!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
Luka

 

 

 

2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பிஃபா விருதினை, குரோஷியா நாட்டின் கேப்டன் லூக்கா மேட்ரிக் பெற்றுள்ளார். இவர் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ மற்றும் எகிப்தின் முகமது சாலாவை பின்னுக்குத் தள்ளி இந்த விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

லூக்கா மேட்ரிக் குரோஷியா அணியின் கேப்டனாக, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின்போது தேர்வு செய்யப்பட்டார். மேலும், வரலாற்றில் முதன்முறையாக மிகச்சிறிய அணியான குரோஷியா, இவர் தலைமையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தொடரின் முடிவில் லூக்காவுக்கு தங்க கால்பந்து விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் பிஃபா சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் யூ.இ.எஃப்.ஏ. லூக்காவுக்கு சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

இந்த விருதுக்கான போட்டியில் உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் முகமது சாலா ஆகியோர் இருந்தனர். லூக்காவும், ரொனால்டோவும் ரியல் மேட்ரிட் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். 
 

அதேபோல், பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் திதியெர் தேஸ்காம்ஸுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும், பெல்ஜியம் கோல்கீப்பர் திபாவுட் கோர்டாஸுக்கு சிறந்த கோல்கீப்பர் விருதும் வழங்கவுள்ளதாக பிஃபா அறிவித்துள்ளது.