Skip to main content

வெளிநாடுகளில் சொதப்பல் பேட்டிங்... தொடர்கதையை மாற்றிய பேட்ஸ்மேன்கள்...

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

“வீட்டுல புலி; வெளியில எலி” என்பதைப்போல் உலக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சிறந்த வாக்கியம் எதுவுமில்லை. ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் சொந்த மைதானத்தில் உள்ளூர் அணிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு அதிக ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. 

 

ii

 

 

டெஸ்ட் போட்டிகளில் அனைத்து கிரிக்கெட் அணிகளும் சொந்த மைதானத்தில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் வெளுத்துக் கட்டும். ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும்போது பெரும்பாலும் மண்ணைக்கவ்வும். இதற்கு உலகின் நம்பர் 1 முதற்கொண்டு எந்த அணியும் பெரிய விதிவிலக்கு இல்லை. 

 

கடந்த 20 டெஸ்ட் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியும். இந்திய அணியை பொறுத்தவரை 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு SEAN(தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) நாடுகளில் பெரிய வெற்றியை பெற்றதில்லை. ஆசிய நாடுகள், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே ஆகிய நாடுகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2007-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒருமுறை 1–0 என்று வென்றுள்ளது. இதை தவிர SEAN நாடுகளில் இந்திய அணி 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. 

 

SEAN நாடுகளும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தோல்வியே மிஞ்சியது. 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டுமே. 2004-2005 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 2007-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்தபோது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. 

 

 

ii

 

 

சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் இருக்கும்வரை வெளிநாடுகளில் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி வந்தது. அந்த சமயங்களில் பவுலிங்கில் பெரிய அளவில் செயல்பட முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. ஆனால் அவர்கள் ஓய்வு பெற்றபிறகு சிலகாலம் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிவந்தது.

 

2018-ஆம் ஆண்டு வெளிநாடு டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, பவுலிங் சிறப்பாக அமைந்தது. பேட்டிங் சொதப்பியது. ஒருகாலத்தில் வெளிநாடு சுற்றுப்பயணங்களின் போது எதிரணியின் 10 விக்கெட்கள் எடுக்கவே தடுமாறி கொண்டிருந்தது. ஆனால், இந்த வருடம் அந்த நிலை மாறியது. தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களின்போது பவுலர்கள் கடமையை சிறப்பாக செய்தபோதும், பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.

 

தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். புஜாரா மற்றும் ரஹானே சில போட்டிகளில் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இவர்களைத்தவிர எந்த இந்திய பேட்ஸ்மேனும் ஓரளவுகூட ரன்களை சேர்க்கவில்லை. தவான், விஜய், ராகுல், ரோஹித் ஷர்மா என மற்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக ஆடியிருந்தனர்.

 

அதே தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புவனேஷ் குமார், தென் ஆப்ரிக்கா தொடரில் அசத்தினார். ஹர்திக் பாண்டியாவும் ஓரளவு பந்துவீச்சில் பங்களித்தார். இஷாந்த் ஷர்மா, முஹமது சமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மூவரும் எதிரணிகளை பந்துவீச்சில் மிரட்டினர். இதே இணைதான் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கியுள்ளது. 

 

ii

 

 

கடைசியாக வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒருசில போட்டிகளில் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், மற்றபடி மோசமாகவே இருந்துள்ளது. நடந்து முடிந்த தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. 

 

இப்படி இருந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் ஜொலித்தது. புஜாரா இரு இன்னிங்ஸ்களிலும் அசத்தினார். கோலி, ரஹானே, ராகுல் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்த அணியின் பேட்டிங் தொடர்கதையை இந்த தொடரின் முதல் போட்டி மாற்றியுள்ளது. இது தொடர வேண்டுமென இந்திய ரசிகர்கள் அனைவரும் விரும்புகின்றனர். 
 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.