Skip to main content

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி தோல்விதான் இந்தியாவின் திருப்புமுனை...!

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

pp

 

2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இதற்கு பிறகுதான் உலகக்கோப்பைக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன என்று தேர்வுக்குழுவின் தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் சரிசெய்யப்பட வேண்டும். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெரும். கிரிக்கெட்டில் அஞ்சாமல் விளையாடும் இளைஞர்களின் அனுபவமும், திறமையும் ஒரு நல்ல இந்திய அணியை உருவாக்கும் என்று பிரசாத் கூறியுள்ளார்.

 

mm
எம்.எஸ்.கே.பிரசாத்

 

2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரை இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் 15 வெற்றி, 12 தோல்வி. பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தோல்வியடைந்தது. சாம்பியன்ஸ் ட்ராபி  இறுதிப்போட்டி தோல்வி தேர்வுக்குழுவின் செயல்களை வெகுவாக மாற்றியது. அதற்கு பின்னர் இந்திய அணி உலகின் தலைசிறந்த அணியாக மாறியுள்ளது. 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி  தொடருக்கு பிறகு 48 போட்டிகளில் 35 வெற்றி, 10 தோல்வி, 3 போட்டிகள் முடிவு இல்லை. 11 தொடர்களில் இங்கிலாந்து தொடரில் மட்டுமே 1-2 என்ற விதத்தில் தோல்வியடைந்தது. மற்ற தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

 

இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவத்தை பற்றி பிரசாத் கருத்து கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா தனது திறமையை மேலும் வெளிப்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்டியா அணியின் சமநிலைக்கு பெரும் வலிமை சேர்க்கிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அணிக்கு கூடுதல் பலமாக உள்ளார். ஹர்திக் பாண்டியா ஒரு திறமை வாய்ந்த வீரர், அவர் அதை உணர வேண்டும். ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமை அவருக்கு உள்ளது.

 

hh

 

அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணிக்கு கொண்டு வருவதற்கு தேர்வுக்குழு எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி பிரசாத் பேசினார். கடந்த இரு ஆண்டுகளில் சில வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். தொடக்கத்தில் ஒரு டி-20 வீரர் என்று பும்ரா கருதப்பட்டார். ஆனால் பும்ரா டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என நாங்கள் நம்பினோம். அடுத்தகட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் தயாராக உள்ளனர்.

 

பிரசாத் உடற்பயிற்சி குழுவினை பாராட்டினார்.  டெஸ்ட் போட்டிகளுக்கு பும்ராவை தயார்படுத்தி அதில் சிறப்பாக விளையாட வைத்துள்ளனர். ஒரு வருட காலத்தில் பும்ரா இந்திய அணியில் மிக முக்கியமான பந்து வீச்சாளராகவும், அதே நேரத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

 

jj

 

சர்வதேச அளவில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மான் கில் போன்ற இளம் வீரர்கள் சமீபத்தில் இந்திய அணியில் இடம் பெற்று வருகின்றனர். இந்திய அணியின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஏ அணியிலிருந்து சீனியர் அணியை மேம்படுத்துகிறோம். நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து திறமையான வீரர்கள் தேர்ந்தெடுத்து, வீரர்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை வழங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் விரும்புகிறோம்.

 

ஐ.பி.எல். தொடரில் உள்ளூர் வீரர்கள் தங்களது அங்கீகாரத்தை பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவார்கள். அவர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டு ஆட்டத்தின் நுணுக்கங்கள், விளையாடும் விதம் ஆகியவை கற்றுத்தரப்படும். அவர்களில் ரஞ்சி தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வாளர்களால் கவனிக்கப்பட்டனர்.  மேலும் அவர்கள் மற்ற வடிவங்களில் விளையாடும்போது அவர்களின் திறமை அறியப்பட்டு அங்கீகாரம் பெறுகிறது. 

 

இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தைப் பற்றி பேசிய பிரசாத், உள்நாட்டு கிரிக்கெட் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறப்பான திறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் காண்கிறோம். எங்கள் தேர்வுக்குழு இந்த வேலையை விட்டு வெளியேறும்போது இந்திய அணி மூன்று வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கு தரமான வீரர்கள் பற்றி இந்தியா கவலையடைய தேவையில்லை என்று பிரசாத் கூறினார். 

 

இந்திய அணி 1983 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில்  உலகக் கோப்பை தொடரை வென்றது. 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில்  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியின்போது தோல்வியடைந்தது. 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. இந்த தோல்விகள்தான் இந்திய அணியை 2019-ஆம் ஆண்டு நடை பெரும் உலகக்கோப்பை தொடருக்கு தயார்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.