Skip to main content

மைதானத்தில் வெடித்த சர்ச்சை... விளையாடுவதை நிறுத்திய இந்திய அணி!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

india vs  australia 3rd test match Sidney

இந்தியா வெற்றிப் பெற 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. 

 

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. இதனால் இந்திய அணி வெற்றிப் பெற 407 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது இந்திய அணி. 

 

இதனிடையே, சிட்னியில் இனவெறி சர்ச்சையால் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த பும்ரா, முகமது சிராஜை ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதேபோல் நான்காவது நாள் ஆட்டத்திலும் இனவெறி தூண்டும் வகையில் சில ரசிகர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் கவனத்தை ஈர்க்கும் வகையில் திடீரென பந்து வீச்சை நிறுத்தினார். முகமது சிராஜிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரஹானே நடுவர்களிடம் பிரச்சனையைக் கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து இனவெறி தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேர் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

 

இது குறித்து விளக்கமளித்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், "இனவெறி தூண்டும் வகையில் செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. 
 

 

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.