Skip to main content

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை!

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

 India-Sri Lanka in the final!


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் நேற்று (14-09-2023) பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்குள் நுழையலாம் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டின.

இந்த நிலையில் நேற்று பிரேமதாசா ஸ்டேடியத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணி சார்பில் தொடக்கத்தில் அப்துல்லா-ஃபகர் ஜமான் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்திலே பாகிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து இறங்கிய அணியின் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், 73 ரன்னிற்கு 2 விக்கெட்டை பாகிஸ்தான் இழந்திருந்தது. 

 

பின்னர் களமிறங்கிய ரிஸ்வான் அதிரடி காட்ட, அப்துல்லா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த அப்துல்லா 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து, முகமது ஹாரிஸ் 3 ரன்களுடனும், முகமது நவாஸ் 12 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. ரிஸ்வான் மட்டும் சிறப்பாக விளையாடி களத்தில் நிற்க அவருக்கு உறுதுணையாக இப்திகார் அஹ்மத் ஓரளவு அதிரடி காட்ட, பாகிஸ்தான் சரிவில் இருந்து மீண்டு கணிசமான ரன்களை குவிக்கத் தொடங்கியது. 27.4 ஓவரில் 130/5 என இருந்த போது மழை பெய்ததால் ஆட்டத்தின் ஓவரை 42 ஆக குறைத்தனர். பின்னர், அஹ்மத் 47 ரன்கள் எடுத்து வெளியேற பாகிஸ்தான் 238 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது. இந்த நிலையில் இருந்தும் அடுத்து களமிறங்கிய சதாப் கான் 3 ரன்னில் வெளியேற, அப்ரிடி களமிறங்கினார். ஆனால், ரிஸ்வான் மட்டும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 86 ரன்னில், 6 பவுண்டரிகள், 2 சிக்சர் என பறக்கவிட்டார். முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. இலங்கை பவுலிங்கில், பதிரான 3 விக்கெட்டுகளும், மதுசன் 2 விக்கெட்டுகளும், தீக்சனாவும் வெல்லலகேவும் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

 

பின்னர், 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா-பெரேரா கூட்டணி களமிறங்கியது. ஆனால், 3.2வது ஓவரில் பெரேரா 17 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, குஷால் மென்டிஸ் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, சிறப்பாக விளையாடி வந்த நிசங்கா-மென்டிஸ் கூட்டணியில் எதிர்பாராத விதமாக பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழக்க 77 ரன்களுக்கு 2 விக்கெட்  என்று தடுமாறியது. இவரை அடுத்து சமரவிக்ரமா களம்கண்டார். ஒரு புறம் மென்டிஸ் ரன்களை விளாசிக் கொண்டிருக்க, அவருக்கு பக்க பலமாக செயல்பட தொடங்கினார் சமரவிக்ரமா. பின்னர், மென்டிஸ் அரை சதம் விளாசி ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பினார். இந்த கூட்டணி மிகச் சிறப்பாக இலங்கையை வெற்றிப் பாதை நோக்கி நகர்த்திச் சென்றனர். இந்த நிலையில் திடீரென சமரவிக்ரமா 48 ரன்களில் அரை சதத்தை தவறவிட்டு வெளியேறினார். அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு விளையாட வந்தார் அசலங்கா. இவர், நிதானமாக விளையாடத் தொடங்கியது இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தது. 

 

ஒரு கட்டத்தில் இலங்கை வென்றுவிடும் என்ற சூழலும் உருவாகியது. 8 பவுண்டரிகளுடன், 1 சிக்ஸர் என சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மென்டிஸ் 91 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வரிசையாக ஷானகா, டி சில்வா, துணித் வெல்லலகே, மதுசன் சொற்ப ரன்களில் வெளியேற தோல்வி நிச்சயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதே சமயம், அசலங்கா விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டிருந்தார். இலங்கையின் சரிவிற்கு காரணம் 41 வது ஓவரில் அப்ரிடி வீழ்த்திய 2 விக்கெட் தான். இதனால், இலங்கை அணி கடைசி(42)வது ஓவரில்  8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் உருவானது. கடைசி ஓவரை ஜமான் கான் வீச மதுசன் முதல் பந்தை எதிர்கொண்டார். அந்த இறுதி ஓவரில் இலங்கை முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டும் எடுத்து  1 விக்கெட்டை இழந்திருந்தது. 

 

இதனால் இலங்கை வெற்றி பெற கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் 5வது பந்தை அசலங்கா எதிர்கொண்டு பவுண்டரிக்கு திருப்ப அரங்கம் அதிர இலங்கை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இருந்தும் பாகிஸ்தான் அணியினருக்கு கடைசி பந்தில் வாய்ப்பு இருந்தது. அதனை டாட் பந்தாக ஆக்கியிருந்தால் வென்றிருக்கலாம். ஆனால், அதன் கனவை அசலங்கா தகர்த்து 2 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்ய வைத்தார். இறுதி வரை களத்தில் நின்ற அவர், 49 ரன்கள் சேர்த்திருந்தார். அதில், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும். போட்டி சமனில் முடிந்ததால் டக்வர்த் லெவிஸ் முறைப்படி இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது நேற்றைய ஆட்ட நாயகன் விருது 91 ரன்கள் எடுத்த குஷால் மென்டிஸுக்கு வழங்கப்பட்டது. 

 

ஒரு நாள் கிரிக்கெட்டின் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தோற்றது அந்த அணிக்கு பெரிய ஏமாற்றமே. அதே சமயம், இலங்கை சென்ற வருடம் ஆசிய கோப்பை 2022ஐ வென்றுவிட்டு. இந்த வருடமும் இறுதி போட்டிக்குள் நுழைந்து பலமான அணி என்பதை நிரூபித்துள்ளது. இதன் மூலம் வருகிற ஞாயிறு 17 செப்டம்பர் இந்தியா-இலங்கை அணிகள் ஆசிய கோப்பை 2023ன் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும்.

 

இதற்கிடையில் இன்றைய (15-09-2023) ஆட்டத்தில்  இந்தியா-வங்கதேச அணிகள் மோதவுள்ளது. இதில், எந்த அணி வென்றாலும் இறுதி போட்டியில் மாற்றம் ஏற்படாது. இந்த போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

 

 

 


 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.