Skip to main content

அதிரடியான வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா! செய்த அசத்தலான சாதனைகள் என்ன?

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

India in the semi-finals with a dramatic victory! What are the amazing achievements?

 

உலகக்கோப்பையின் 33 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித்தின் சொந்த ஊர் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அவர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து வந்த கோலி, கில்லுடன் இணைந்து பொறுப்பாக ஆடினார்.  சதமடிப்பார் கில் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் 92 பந்துகளில் மதுஷங்கா பாலில் அவுட் ஆனார். அடுத்து கோலியாவது சதமடிப்பாரா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரையும் மதுஷங்கா 88 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து இணைந்த ராகுல், ஷ்ரேயாஸ் இணையில் ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யா மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 ரன்களுக்கு வீழ்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஷ்ரேயாஸ் தனது அதிரடியை காட்டத் தொடங்கினார். 6 சிக்ஸர்கள் அடித்து சதத்தை நெருங்கும் நேரத்தில் மதுஷங்கா பந்தில் 82 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் ஜடேஜாவின் கடைசிக் கட்ட அதிரடியான  35  ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  357 ரன்கள் குவித்தது.

 

358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலே அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. இலங்கை அணியின் நிஷங்கா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கருணரத்னே 0, கேப்டன் குசால் மெண்டிஸ் 1, சமரவிக்ரமா 0 என நடையைக் கட்டினர். 3-4  தடுமாற அடுத்து வந்த அசலங்கா 1, ஹேமந்தா 0 என இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து  ஷமி க்கு மீண்டும் ஒரு ஹாட்ரிக் வாய்ப்பை வழங்கினர். ஆனால் அடுத்த பந்தை சமீரா சரியாக எதிர் கொண்டு ஹாட்ரிக் வாய்ப்பை தடுத்தார். இருந்தும் அவரும் சில பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 22-7 எனும் மோசமான நிலையை எட்டியது. அடுத்து மேத்யூஸ் 12 எனும் இரட்டை இலக்க எண்ணை எட்டி ஷமி பந்து வீச்சில் போல்டு ஆனார். 29-8 என இருந்த நிலையில்,  ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 35 ரன்கள் எனும் ஜிம்பாப்வே அணியின் மோசமான சாதனையை பின்னுக்கு தள்ளி விடுமோ என இலங்கை ரசிகர்கள் அஞ்சிய நிலையில், ரஜிதாவின் 14 ரன்களும், தீக்ஸனாவின் 12 ரன்களும் கை கொடுக்க மோசமான வரலாற்றில் இருந்து தப்பியது. இருப்பினும் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது இந்திய அணியின் நான்காவது மிகப்பெரிய வெற்றியாகும். முதலிடத்திலும் இந்திய அணியே உள்ளது. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதுவே ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன் வித்தியாசம் ஆகும். இந்திய அணி சார்பில் ஷமி 5 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

ஆட்டநாயகனாக மிக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி தேர்வு செய்யப்பட்டார்.

 

இன்றைய போட்டியில் ஷமி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், உலக கோப்பையில்  3  முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் உடன் சமன் செய்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்தியா சார்பில் உலகக்கோப்பைகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்கிற ஜாகீர் கான் (44) சாதனையை பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைகளில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

 

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்னும் ஸ்ரீநாத்தின் (3) சாதனையையும் முறியடித்துள்ளார்.

 

இன்றைய ஆட்டத்தில் 357 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக  முறை (36) 350-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த அணி என்கிற சாதனையை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்க அணி 33 முறை 350 க்கும் மேற்பட்ட ரன்களை  குவித்துள்ளது.

 

இதற்கு முன்பு 2011 உலகக் கோப்பையில் இதே வான்கடே மைதானத்தில் இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு 23 வருடங்களுக்குப் பின் உலகக் கோப்பை வென்று வரலாற்று சாதனை புரிந்தது. அதேபோல 12 வருடங்களுக்குப் பின்பு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளதால், வான்கடே மைதானம் இந்தியாவுக்கு ராசியான மைதானம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

- வெ.அருண்குமார்

 

 

 

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.