Skip to main content

இலங்கையின் வெற்றிகளுக்கு டாட் வைத்த இந்தியா!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

India put a dot on Sri Lanka's victories!

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் நான்காவது ஆட்டத்தில் நேற்று (12-09-2023) இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளும் சிறப்பாக பந்து வீச ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. 

 

ஞாயிறு தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழைக்காரணமாக திங்கள் வரை நடைபெற்றது. அதில், இந்தியா அபார வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், மறுநாள் இந்திய இலங்கையுடன் விளையாடும் சூழல் உருவானது. மேலும் ஓய்வில்லாமல் இந்திய அணியால் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்விகளும் எழுந்தது. 

 

இந்த நிலையில் தான் நேற்று (12-09-2023) பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் தொடக்கத்தில் ரோகித்-சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா தனது முதல் விக்கெட்டை 80 ரன்களில் தான் இழந்தது. இதனால், மிகப்பெரிய இலக்கை இந்தியா நிர்ணயிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுபம்ன் கில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.பின்னர் விராத் கோலி களமிறங்க புதிய நம்பிக்கை பிறந்தது. ஏற்கனவே, களத்தில் இருந்த ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் கோலியும் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், வந்த வேகத்தில் 3 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார் விராத்.

 

அடுத்து மூணாவது விக்கெட்டுக்கு விளையாட வந்தார் இஷான் கிஷன். சிறப்பாக விளையாடி ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்து துணித் வெல்லலகே சுழலில் சிக்கி அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 91 ரன்களுக்கு 3 வீரரை இழந்து தடுமாறத் தொடங்கியது. தொடர்ந்து, சரிவை சந்திந்த இந்திய அணியை நிமிர்த்த களமிறங்கினார் கே.எல்.ராகுல். இஷான் கிஷனும் ராகுலும் கூட்டணி அமைத்து நிதானமா ஆட்டத்தை நகர்த்தினர். இதனால் ஆட்டம் இந்தியா கைவசம் வரத் தொடங்கியது. இருந்தும் மறுமுனையில் இலங்கையின் பவுலிங் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது. அதிலும், துணித் வெல்லகலே பந்தை எதிர்கொள்ள மிகக் கடினமாகவே இருந்தது. ஆகையால், கே.எல் ராகுல் 39 ரன்களில் வெல்லகலேவின் சுழற்பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

இவரைத் தொடர்ந்து ஹர்டிக் பாண்டியா களமிறங்க, இஷான் கிஷனும் அவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்படி தொடர்ந்து ஜடேஜாவும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்தியா 178 ரன்களுக்கு 7  வீரர்களை இழந்து சோக நிலையில் இருந்தது. இருந்தும் அக்சர் படேல் நிதானமாக விளையாடி 26 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சேர்த்து வலுசேர்த்தார். அடுத்து பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் மிகக் குறைந்த ரன்களில் வெளியேற இந்தியா  213 ரன்களில் ஆல்-அவுட் ஆகியது. இதற்கு முழுமுதல் காரணம் இலங்கையின் அபார பந்து வீச்சுதான். இலங்கை பந்து வீச்சில், துணித் வெல்லகலே 5 விக்கெட், சரித் அசல்ங்கா 4 விக்கெட், மஹீஷ் தீக்சனா 1 விக்கெட் என இந்திய அணியை திக்குமுக்காட வைத்தனர்.

 

இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தது. ஒரு நாள் போட்டியில் 213 ரன்கள் என்பது கணிசமான தொகை தான். இதனை வைத்தே ஆட்டத்தை பவுலிங் மூலம் வெற்றிபெற முடியும் என்பதைத் தான் இந்தியா நிரூபித்துள்ளது. இலங்கை சார்பில் நிசங்கா-கருணரத்னே கூட்டணி முதலில் களமிறங்கினர். ஆனால், இரண்டாம் ஓவரில் இருந்து இலங்கை அணி தடுமாறத் தொடங்கியது. இலங்கை வீரர் நிசங்கா 6 எடுத்து வெளியேற, அடுத்து களமிறங்கிய குஷால் மேன்டிசும் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து கருணரத்னே 7.1 வது ஓவரில் சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், இலங்கை அணி 25 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்தது.

 

இதனைத் தொடர்ந்து நெருக்கடி நிலைக்கு சென்ற இலங்கையை அணியை சதிராவும் அசலன்காவும் சேர்ந்து மீட்க முயன்றனர். ஆனால், சதீரா 17 ரன், அசலங்கா 22 ரன் என ஆட்டம் இழந்து ஏமாற்றமளித்தனர். இந்திய அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள இலங்கை மிகவும் சிரமப்பட்டது. அதிலும், குல்தீப் யாதவ் அருமையாக வீசினார். இதனால், இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கே 7 வீரர்களை இழந்திருந்தது இலங்கை அணி. இலங்கை சார்பில் தனஞ்ஜெய டி சில்வா 41 ரன்களும், அடுத்து களமிறங்கிய தீக்சனா, கசுன் ரஜிதா, பதிரானா அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இருந்தும் இலங்கை அணியை தூக்கி நிறுத்த மிகவும் முயற்சி செய்தார் துணித் வெல்லகலே. பவுலிங்கில் எப்படி 5 விக்கெட் எடுத்து அசத்தினாரோ, அதேபோல் பேட்டிங்கிலும் 42 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

 

இருப்பினும், இலங்கை 10 விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை 2023ன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள், பும்ரா, ஜடேஜா இருவரும் 2 விக்கெட், சிராஜும் பண்டியாவும் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஆனால், ஆட்ட நாயகன் விருது 5 விக்கெட் எடுத்து, 42 ரன்களையும் விளாசிய துணித் வெல்லகலே பெற்றார். தொடர்ந்து இரண்டு நாளில் இரண்டு ஆட்டங்களை விளையாடிய இந்தியா இரண்டிலும் வெற்றி பெற்று  சிறந்த அணி என்பதனை நிரூபித்துள்ளது. 

 

இலங்கை நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. எனவே, பாகிஸ்தான் அணிக்கும் இலங்கைக்கும் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இந்த இரு அணிகளும் நாளை ஒரே ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இதனால் நாளைய ஆட்டம் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் தான். நாளை நடக்கும் ஆட்டம் பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி  3.00 மணிக்கு தொடங்கும்.
 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.