Skip to main content

போராடி தோற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் அபாரம்

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

India fought and lost.. Sanju Samson is great

 

இந்தியாவிற்கு சுற்றும் பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடர் நேற்று துவங்கியது. 

 

உலகக் கோப்பைக்கு தேர்வான வீரர்கள் நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்ட நிலையில் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முற்றிலும் இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து இருந்தது. கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். 

 

நேற்று துவங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழையால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. எனவே போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் மாலன் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மற்றும் மார்க்ரம் சொற்ப ரன்களில் வெளியேற கால்சன் மற்றும் மில்லர் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 40 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்திருந்தது. அதிக பட்சமாக தென் ஆப்பிரிக்க அணியில் மில்லர் 75 ரன்களும் க்ளாசன் 74 ரன்களும் எடுத்தனர்.

 

250 ரன்கள் இழக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற 51 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்களை இழந்திருந்தது. இதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுமையாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஷ் ஐயர் 50 ரன்களுக்கு அவுட்டானார். மறுபக்கம் ஷர்துல் தாக்கூருடன் ஜோடி சேர்ந்த சாம்சன் அதிரடி காட்டினார். எனினும் இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக சாம்சன் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 86 ரன்களை எடுத்திருந்தார். 

 

ஆட்ட நாயகனாக க்ளாசன் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.