Skip to main content

அமைதியான ஆஸ்திரேலியா... அடுத்த வெற்றியை நோக்கி இந்தியா...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் வீரர்கள் என சிலர் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு ஆகியவற்றில் கதிகலங்கியது ஆஸ்திரேலியா. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் வீரர்கள் என அனைவரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர். 

 

ii

 

முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமல்லாது, உலகக்கோப்பை தொடரையும் கருத்தில் கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது. தவான், கோலி, ரோஹித், எம்.எஸ்.தோனி, புவனேஷ், ஜடேஜா, ராயுடு, ஷமி ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உண்டு. மற்ற அனைவரும் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.  

 

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க இணை ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை ரோஹித் ஷர்மா எடுத்த ரன்கள் 1,143, பேட்டிங் சராசரி 51.95. ஷிகர் தவான் 644 ரன்கள்,  42.93 பேட்டிங் சராசரி. இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதும் உதவியுள்ளனர். இருவரும் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணியை கதிகலங்க வைப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

 

ii

 

மூன்றாவது வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்கு பெரிய பக்கபலமாக இருப்பார். இவர் சிட்னி மைதானத்தில் மட்டும் குறைவான சராசரி வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அதை மாற்றி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 1001 ரன்கள், 50.05 சராசரி. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அந்த தொடரில் இந்திய அணி எடுத்த ரன்களில் 72% சதவீத ரன்களை எடுத்தது டாப் 3 பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக களமிறங்கும் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லை. உலகக்கோப்பை போட்டிகளில் இடம்பெற இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆசியக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள ராயுடு இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், கேதர் ஜாதவ் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருப்பதால் இந்திய அணியின் 6-வது பந்துவீச்சாளராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் தனது இடத்தை உறுதிசெய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.  

 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த எம்.எஸ்.தோனி ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இவரது அனுபவம் இந்திய அணியின் இளம் வீரர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரது பினிஷிங் திறமை மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங் போன்றவை ஆட்டத்தை மாற்றி இந்திய அணியை வெற்றிபெற வைக்கும். கடந்த சில தொடர்களில் எதிர்பார்த்த அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இவரது அனுபவம் மூலம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் திறமை கொண்டவர்.  

 

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் அணியின் முக்கிய வீரர்கள். டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா ஒருநாள் தொடரிலும் தனது பங்களிப்பை ஆற்றுவார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பது ஹர்திக் பாண்டியா மட்டுமே. உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆல் ரவுண்டராக வேகப்பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். இவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். 

 

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவமில்லை என்றாலும் இந்த டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இணை சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு முக்கிய பங்குவகிப்பர். 

 

ii

 

 

வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், முஹம்மது சமி ஆகியோரின் அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முஹம்மது சமி ஒருநாள் தொடரிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் புவனேஸ்வர் குமார், முஹம்மது சமி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலியா அணியை திணறவைக்கும். 

 

இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அனுபவமற்ற வீரர்கள் விளையாடுவது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். 

 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.