Skip to main content

அநாகரீகமாக நடந்துகொண்ட ஹர்மன்பிரீத் கவுர்; வைரலாகும் வீடியோ

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு போட்டிகளை வென்றும், கடைசி போட்டியில் தோல்வியுற்றும் இந்திய மகளிர் அணி டி20 தொடரை வென்றது. அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், தொடரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டி கடந்த ஜூலை 22ஆம் தேதி பங்களாதேஷ், டாக்கா ஷேர் - இ - பங்களா மைதானத்தில் நடைபெற்றது. 

 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 225 ரன்களை எடுத்தது. அந்த அணியில் பர்கானா ஹக் சிறப்பாக விளையாடி 107 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. 

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

இந்திய அணியின் ஸ்கோர் 160 ஆக இருந்த போது, பங்களாதேஷ் அணியின் நகிதா அக்தர் வீசிய பந்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், எல்.பி.டபிள்யுவால் தனது விக்கெட்டை இழந்தார். இதில், நடுவர் அவுட் கொடுத்தபோது ஹர்மன்பிரீத் கவுர், பந்து தனது பேட்டில் படவில்லை, கால் பேடில் பட்டது என்று சைகை காட்டினார். ஆனாலும், நடுவர் அவுட் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஹர்மன்பிரீத் கவுர், தனது பேட்டினால் ஸ்டம்பை அடித்தார். இது போட்டியின்போது பெரும் சர்ச்சையானது. இறுதியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தப் போட்டி சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிக்கான கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்மன்பிரீத் கவுர், “இந்த விளையாட்டின் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். கிரிக்கெட்டைத் தவிர அங்கு நடக்கும் நடுவர் முறையும் எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அடுத்த முறை நாங்கள் பங்களாதேஷிற்கு வரும்போது இதுபோன்ற நடுவர்களைச் சமாளிப்பது குறித்து நாங்களே எங்களைத் தயார் படுத்திக்கொண்டு வரவேண்டும். நாங்கள் ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்தினோம், ஆனால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நடுவர்கள் அளித்த சில முடிவுகளால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்” என்று கூறினார்.

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது. அதன்பிறகு இரு அணி வீரர்களும் இணைந்து குழு படம் எடுக்கும்போது, இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பங்களாதேஷ் அணியைப் பார்த்து, “ஏன் தனியாக இருக்கிறீர்கள்; நடுவர்களையும் அழைத்து வாருங்கள். நீங்கள் போட்டியைச் சமன் செய்யவில்லை. நடுவர்கள் உங்களுக்காக அதைச் செய்தார்கள். அவர்களையும் அழைத்துப் புகைப்படம் எடுப்பது தான் நல்லது” என்று கூறினார். இதனைக் கேட்டு மனமுடைந்த பங்களாதேஷ் அணி கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டி, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, தனது அணியினரை அழைத்துக்கொண்டு டிரஸிங் ரூமிற்குச் சென்றார். 

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

அதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டி செய்தியாளர்களைச் சந்தித்து ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர்,  “ஹர்மன்பிரீத் அப்படிச் செய்தால் நாங்கள் எதுவும் செய்யமுடியாது. ஆனால், அவர் ஒரு வீரராகக் கொஞ்சம் நாகரீமாகப் பேசியிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க ஹர்மன்பிரீத் கவுருடைய முடிவு. அவரைப் பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அந்த இடத்தில் சூழல் சரியில்லை என்று உணர்ந்ததால் அந்த இடத்தை விட்டு நாங்கள் வெளியேறினோம். கிரிக்கெட் மரியாதைக்குரிய விளையாட்டு மற்றும் அது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டும் கூட”  என்று கூறினார்.

 

இந்திய அணி கேப்டன், ஹர்மன்பிரீத் கவுரின் செயலும், பேச்சும் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐ.சி.சி. ஹர்மன்பிரித் கவுருக்கு தனது சம்பளத்தில் இருந்து 75% அபராதம் விதித்து அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 

 

 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

வங்காள தேச பொதுத் தேர்தல்; ஐ.நா, அமெரிக்கா குற்றச்சாட்டு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
UN, US accused on Bangladesh General Election

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. 

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 7 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 41.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் நேற்று முன்தினம் (08-01-24) வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவே தங்களது தேர்தல் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, நியாயமற்ற முறையில் நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வங்காள தேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,  “வங்கதேசத்தில் நடந்த 12வது பொதுத் தேர்தல் நம்பகமான, நியாயமான முறையில் நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.