Skip to main content

மகளிர் தினத்தில் பிறந்து மகளிர் கிரிக்கெட்டில் சாதித்தவர்

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. பின்னர் களமிறங்கிய ஹர்மன் பிரீட் கவுர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்ஸ்கர்கள் உட்பட 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். உலகக்கோப்பைகளில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

 

harman preet

 

மழையின் காரணமாக அந்த போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டிருந்தது. 50 ஓவர் முழுவதும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் 200 ரன்களை எடுத்திருப்பார் கவுர். இவரின் இந்த இன்னிங்ஸ், 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்திருந்த கபில் தேவ் இன்னிங்ஸுடன் ஒப்பிடும் அளவிற்கு ஸ்பெஷல் இன்னிங்ஸாக இருந்தது. 
 

2009-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹர்மன் பிரீத் கவுர் அடித்த இமாலய சிக்ஸர் மகளிர் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட மறக்க முடியாத சிக்ஸர். இவரின் இந்த பவரான சிக்ஸ் பலரை ஆச்சரியப்படுத்தியது. இதனால் இவரது பேட் லேப்பில் சோதனை செய்யப்பட்டது. ஊக்கமருந்து சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார். அனைத்து சோதனை முடிவுகளும் கவுருக்கு சாதகமாக இருந்தது.

 

harman preet

 

கவுர் போட்டிகளின்போது மைதானத்தில் விராத் கோலியை போல மிகவும் அக்ரசிவாக இருப்பார். கவுரின் ரோல் மாடல் கிரிக்கெட்டர் விரேந்திர சேவாக். ரோல் மாடலைப் போலவே அதிரடிக்கு பெயர் பெற்றவர் ஹர்மன் பிரீட். 2017-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 8 இன்னிங்ஸ்களில் 359 ரன்கள், பேட்டிங் சராசரி 60, ஸ்ட்ரைக் ரேட் 95. இந்த தொடரில் ஒரு சதம், 2 அரைசதங்கள் அடித்து அசத்தினார்.
 

ஹர்மன் பிரீட் கவுர் பஞ்சாப் மாநிலம் மோகாவில் பிறந்தார். 20 வயதில் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2009-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அதே ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடினார். 

 

2012-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடரில் கேப்டனாக இந்திய  அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது இந்திய அணி. அணிக்கு தேவையானபோது ஸ்பின் பவுலிங்கிலும் அவ்வப்போது சிறப்பாக பந்துவீசுவார். 2014-ல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 85 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்தது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இரண்டாவது சிறந்த பந்துவீசாக உள்ளது.  

 

harman preet

 

2018-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கவுர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்  51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் 5 போட்டிகளில் 183 ரன்கள், பேட்டிங் சராசரி 45.75. 2018-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகளிர் டி20 சர்வதேச போட்டியில் சதமடித்து, டி20-களில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
 

இவரது தந்தை ஹர்மந்தர் சிங் ஃபுளார் மாநில அளவிலான கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவரது தந்தை இவரை ஹாக்கி வீரராக பயிற்சியில் ஈடுபடுத்தினார். ஆனால் கவுர் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  
 

கவுர் தொடக்க காலங்களில் ஹாக்கி ஸ்டிக் மூலம் கிரிக்கெட் பேட்டிங் பயிற்சி செய்து வந்தார். அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற முயன்றபோது அவரது குடும்பத்தால் அகாடமிக்கான தொகையை கட்ட இயலவில்லை. சோதி என்ற பயிற்சியாளர் உதவியுடன் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 

 

2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகளிர் பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீரர் இவர்தான். 2017-ல் சிட்னி தண்டர்ஸ் அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 
 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்மன் பிரீட் கவுர் 2017-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதினை பெற்றார். மகளிர் தினத்தன்று பிறந்தவர் என்பது குறிபிடத்தக்கது.

 

 

 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதித்த பார்வை மாற்றுத்திறனாளி இந்திய பெண்கள் அணி

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

India's visually impaired women's team beat Australia

 

சர்வதேச பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், இங்கிலாந்து பர்மிங்காமி உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதில், இந்த ஆண்டு முதல்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. இதில், இந்திய பெண்கள் அணி பங்கேற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.  

 

20 ஓவர் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதின. இந்த இறுதி போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்களை இழந்து 114 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக துவங்கப்பட்டது. பிறகு மழையின் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட 42 ரன்கள் இலக்கை இந்திய அணி எதிர்கொண்டது. 

 

இதில் இந்திய அணி, 3.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய பெண்கள் அணிக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். 

 

பிரதமர் நரேந்திர மோடி, தங்கம் வென்ற பார்வை மாற்றுத்திறனாளி பெண்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள். நமது விளையாட்டு, பெண்களின் அசைக்க முடியாத மனப்பான்மையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.