Skip to main content

சென்னை அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது... -ஹர்பஜன் சிங் சொல்லும் ஆருடம்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Harbhajan Singh

 

 

இந்தாண்டு சென்னை அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது என சென்னை அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து, அணியின் வெற்றியை எளிமைப்படுத்தினார். அதனையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகியுள்ள சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், சென்னை அணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை அணி கோப்பையை வென்ற தொடரில், இதேபோல மும்பை அணியை முதல் போட்டியில் வீழ்த்தினோம். நமக்கு இது நல்ல சகுனமாக தெரிகிறது. மீண்டும் அதே போல வெற்றியுடன் முடிப்போம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

 

 

Next Story

"ஒன்றாக சேர்ந்து வெற்றி பெறுவோம்" - விமர்சனத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

harbhajan singh advice for indian cricket fans tweets 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்த விமர்சன பதிவு ஒன்றுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில், “தோனி மட்டும்  தனியாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பைகளை வென்று கொடுத்தாரா. அணியில் இருந்த மற்ற 10 வீரர்கள் விளையாடவில்லையா. ஆஸ்திரேலியா போன்ற மற்ற  நாடுகள் உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த அணியினர் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றால் கேப்டன் வென்றார் என்று கூறப்படுகிறது. ஒன்றாக  சேர்ந்து வெற்றி பெறுவோம்; ஒன்றாக சேர்ந்து தோல்வி அடைவோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“இந்தக் கடினமான நேரத்திலும் உடன் இருக்க வேண்டும்” - மல்யுத்த வீரர்களுக்கு சானியா மிர்சா ஆதரவு

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

harbhajan singh and saniya mirza give them support to sakshi malik and vinesh bogat for indian wrestlers issue 

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும். அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

harbhajan singh and saniya mirza give them support to sakshi malik and vinesh bogat for indian wrestlers issue 

 

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், "சாக்‌ஷி, வினேஷ் ஆகியோர் இந்தியாவின் பெருமையாளர்கள். நான் ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில், தெருவில் இறங்கி போராடி வரும் நம் தேசத்தின் பெருமையாளர்களை கண்டு வேதனை அடைகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் சானியா மிர்சா தனது ட்விட்டரில், "ஒரு விளையாட்டு வீரர் என்பதை விட ஒரு பெண்ணாக இதைப் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் நாட்டிற்கு விருதுகளை வாங்கி வந்தனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களையும் நாம் கொண்டாடினோம். அவர்கள் விருது வாங்கி வந்தபோது நீங்கள் கொண்டாடினீர்கள் என்றால் தற்போது அவர்களின் கடினமான நேரத்திலும் அவர்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இது மிகவும் உணர்வுகரமான விஷயம். அது மட்டுமின்றி முக்கிய குற்றச்சாட்டுகளையும் கொண்டது. உண்மை எதுவாக இருந்தாலும் விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.