Skip to main content

"தோனி இந்தியாவுக்கு விளையாடுவாரா..? மாட்டாரான்னு தெரியணும் அவ்ளோதானே" - ரசிகர்களுக்கு பதிலளித்த ஹர்பஜன்...

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

2019 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியதே தனது கடைசி போட்டி என்பது தோனிக்கு தெரியும் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார். 

 

harbhajan on dhonis retirement


உலகம் முழுவதும் கரோனாவால் முடங்கிப்போயுள்ள நிலையில், சாமானியர் முதல் செலிபிரிட்டிகள் வரை தங்களது நேரத்தை சமூகவலைதளங்களிலேயே அதிகம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் நேர்காணல்கள் செய்வது, மக்களுடன் கலந்துரையாடுவது என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், பல பொழுதுபோக்கு நிறுவனங்களும் சமூக ஊடகங்களில் மும்மரமாக இயங்கி வருகின்றன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.  

அப்போது ரசிகர் ஒருவர், தோனி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? எனக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த ரோஹித் சர்மா, "இந்தக் கேள்வியை தயவு செய்து தோனியிடமே கேட்டுவிடுங்கள், அவர் விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்கு தெரியவில்லை" என தெரிவித்தார். இதே கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், "உங்களுக்கு தோனி இந்திய அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே. என்னை பொருத்தவரை, அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை. 2019 உலகக் கோப்பை போட்டிதான் இந்தியாவுக்காக, தான் விளையாடிய கடைசி போட்டி என அவருக்கு தெரியும்" எனக் கூறியுள்ளார்.